பதிவு செய்த நாள்
26 பிப்2012
01:21
புதுடில்லி : வருமான வரி விலக்கு உச்சவரம்பை 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைக்க உள்ளது.
இதற்கான ஒப்புதல், இக் குழுவின் தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டது. தற்போது 1 லட்ச ரூபாய் வரையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டு பிரிமியம், மாணவர்களின் கல்விக் கட்டணம் ஆகிய செலவுகளை, ஆண்டு வருமானத்தில் கழித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
மேலும், அடிப்படை கட்டமைப்புத் துறையின் கடன் பத்திரங்களில் 20 ஆயிரம் ரூபாய் வரையிலான முதலீட்டிற்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, ஆண்டுக்கு மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இதை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்குப் பரிந்துரைக்கவும் நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது, ஆண்டு வருவாயில், முதலீடுகள் போக, 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.
5 லட்சத்தில் இருந்து 8 லட்ச ரூபாய் வரையிலான வருவாய்க்கு 20 சதவீதமும், அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விகிதத்திற்கான வருமான அளவையும் அதிகரிக்கப் பரிந்துரை செய்வது என நிலைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பார்லிமென்ட் நிலைக்குழு, மீண்டும் வரும் மார்ச் 2ம் தேதி கூட உள்ளது. அப்போது, பரிந்துரைகள் இறுதி செய்யப்படும். இறுதி அறிக்கை, மார்ச் மூன்றாவது வாரத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|