பதிவு செய்த நாள்
27 பிப்2012
02:31
உள்நாட்டில் பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் கம்போடியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்யப்படுவதால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தாராளமாக அனுமதி வழங்கியதால், மொத்த வியாபாரிகள் பருத்தியை பதுக்கினர்; இதனால் பருத்திக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. நூலிழை விலை தாறுமாறாக உயர்ந்தது. அதற்கேற்ப, ஜவுளி விலையை உயர்த்த முடியாமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை இருப்பில் வைக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருத்தியை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நடப்பாண்டு, 345 லட்சம் பருத்தி பொதிகள் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதில், 80 லட்சம் பருத்தி பொதிகளை மட்டும் ஏற்றுமதி செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் பருத்தி அறுவடை துவங்கி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி சுற்று வட்டாரத்தில் சிறுவலூர், பதிபாளையம், கூகலூர், பங்களாபுதூர், காசிபாளையம், கவுந்தபாடி உள்ளிட்ட பகுதிகளில், 1,000 ஏக்கருக்கும் மேல் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பருத்தி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு சங்க தலைவர் சிவநேசன் கூறுகையில், "மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கின்படி, பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம், பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பருத்தி விலை குறைந்துள்ளது. ஒரு பொதி பருத்தி, 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது,' என்றார்.
கோபியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்," நடப்பாண்டு பருத்தி விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற வாரம் ஒரு குவிண்டால், 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது, நடப்பு வாரம், 3,500 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரே வாரத்தில் பருத்தி விலை, 500 ரூபாய் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|