பதிவு செய்த நாள்
27 பிப்2012
02:32
சேலம்:தமிழகத்தில், திருமண சீசன் துவங்கி உள்ள நிலையில், தக்காளி பழத்துக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால், தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.சேலத்துக்கு, தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காவேரிப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து தினசரி, 10 வேன்களில் தக்காளி பழம் விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது.
சேலம் மாவட்டத்தின் வாழப்பாடி, ஓமலூர், பனமரத்துப்பட்டி, அயோத்தியாபட்டணம், மல்லூர், மேச்சேரி, மேட்டூர், ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் இருந்து தினசரி பஸ்கள், வேன்களில் சேலத்திற்கு விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது திருமண சீசன் காரணமாக, தக்காளி பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், தக்காளி பழங்களில் வெம்பல் நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் தக்காளி பழத்தின் வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தினசரி, 10 வேன்களில் வந்து கொண்டு இருந்த தக்காளி பழத்தின் அளவு தற்போது பாதியாக குறைந்து நான்கு வேன்களில் மட்டுமே வருகிறது.
இதே போன்று சேலம் மாவட்டத்தின், புறநகர் பகுதிகளில் வந்து கொண்டு இருந்த தக்காளி பழத்தின் வரத்தும் பாதியாக குறைந்து விட்டது. இதனால், கடந்த வாரம் வ.உ.சி., மார்க்கெட், பால்மார்க்கெட், காய்கறி மார்க்கெட், தள்ளுவண்டியில் கிலோ, 12 ரூபாய் முதல், 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி பழத்தின் வரத்து குறைந்ததால், அதன் விலை, கிலோ 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இதே போன்று சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் கிலோ, 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி பழம், கிலோ, 15 ரூபாய் முதல், 17 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி பழத்தின் சீசன் முடிவுக்கு வரவுள்ளதால் தர்மபுரி மாவட்டம், சேலத்தின் புறநகரில் இருந்து விற்பனைக்கு வரும் தக்காளி பழத்தின் அளவு மேலும் குறையும் என தெரிகிறது. இதனால் தக்காளி பழத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என்று வியாபாரிகள் தெரித்துள்ளனர்.
இது குறித்து பால்மார்க்கெட் தக்காளி பழ வியாபாரி சீனிவாசன் கூறியதாவது:
தக்காளி பழத்தின் சீசன் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இதனால், சேலத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் நாட்டு தக்காளி பழத்தின் வரத்து பாதியாக குறைந்து விட்டது.
இன்னும் சில தினங்களில் தக்காளி பழத்தின் வரத்து மேலும் குறையும். இதனால், தக்காளி பழத்தின் விலையில் மேலும் உயர்வு ஏற்படும்.
நாட்டு தக்காளி பழத்தின் வரத்து குறைந்துள்ள நிலையில், பெங்களூர் தக்காளி பழத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால், பெங்களூர் மற்றும் ஒசூர் பகுதியில் இருந்து சேலத்திற்கு வரும், பெங்களூர் தக்காளி பழத்தின் வரத்து இன்னும் சில தினங்களில் அதிகரிக்கும். இவ்வாறு சீனிவாசன் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|