பதிவு செய்த நாள்
27 பிப்2012
02:33
ஈரோடு:ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க கோரி, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டரிடம் மனு அளித்தது.இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி கூறியதாவது:ஈரோட்டில், நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. நான்கு இடங்களிலும் மாதிரிகள் வைக்க போதிய இடவசதி இல்லை. தனித்தனியாக ஏலம் நடப்பதால், விலை மாறுபடுகிறது.
நான்கு இடங்களில் எங்கு கொண்டு சென்றால், கூடுதல் விலை கிடைக்கும் எனத்தெரியாமல், விவசாயிகள் குழப்பம் அடைகின்றனர். மஞ்சளை கொண்டு செல்லும் வாகனங்களால், ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஈரோடு மஞ்சள் விவசாயிகளின், 15 ஆண்டுகள் கோரிக்கையான ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகத்தை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும்.
கருமாண்டி செல்லிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடத்தில் அல்லது வாடகை கட்டிடத்தில் ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க வேண்டும். அரசால் ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க இடம் ஏற்பாடு செய்ய இயலாது என்றால், இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில், வாடகைக்கு இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.
ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அனைத்து வகையிலும் இணைந்து செயல்படவும் உதவவும் தயார்.
மஞ்சள் விற்பனையில் விலை, எடை, பணப்பட்டுவாடா, சரக்கு ஒப்படைப்பு சீட்டு வழங்குதல், கமிஷன், வட்டி போன்றவற்றில் முறைகேடு நடக்கிறது. பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடப்பதால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|