பதிவு செய்த நாள்
27 பிப்2012
02:38
கோவை:கறிக்கோழி உற்பத்தி, கடந்த ஆண்டைக் காட்டிலும், 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால், அதன் விலை கடந்த இரு தினங்களில் கிலோவிற்கு, பத்து ரூபாய் வரை குறைந்துள்ளது.தமிழகத்தில், கோவை, பல்லடம், திருப்பூர் ஆகிய இடங்களில் அதிகளவில் கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் கறிக்கோழிகள், தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.கேரள மாநிலத்துக்கு மட்டும், நாள்தோறும், மூன்று லட்சம் கறிக்கோழிகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. கறிக்கோழியின் தேவை அதிகரிப்பு காரணமாக, அதன் விலையில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி, ஒரு கிலோ கறிக்கோழி விலை 41 ரூபாயாக இருந்தது. இது, நடப்பு பிப்ரவரி 13ம் தேதி, 50 ரூபாயாக உயர்ந்தது.
அதன்பின், 'விறுவிறு' வென உயர்ந்து சென்ற 18ம் தேதி, 56 ரூபாயாக அதிகரித்தது.
இந்நிலையில், கறிக்கோழி விலை மீண்டும் இறங்கு முகத்தை தழுவியுள்ளது. 22ம் தேதி ஒரே நாளில் எட்டு ரூபாய் குறைந்து, ஒரு கிலோ கறிக்கோழி, 48 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து நேற்று, 46 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரு தினங்களில், கறிக்கோழி விலை கிலோவுக்கு, 10 ரூபாய் வீதம் சரிந்துள்ளது. கறிக்கோழி விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வந்த நிலையில், அதே வேகத்தில் அதன் விலை இறங்கி வருவது கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலை இறக்கத்துக்கு, கறிக்கோழி உற்பத்தி அதிகரித்திருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. கறிக்கோழிக்கு நல்ல விலை கிடைப்பதால், அதன் உற்பத்தி உயர்ந்துள்ளது. இது விலைச்சரிவுக்கு வித்திட்டுள்ளது.இதுகுறித்து கறிக்கோழி விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:குறிப்பாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் கறிக்கோழி உற்பத்தி, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. சராசரியாக, 15 சதவீதம் உயர்ந்தால் மட்டுமே விலை சீராக இருக்கும். கறிக்கோழிக்கு நல்ல விலை கிடைத்ததால், அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இதே மாதம் கறிக்கோழி கிலோ, 72 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், உற்பத்தி மிகுதியால், இந்தாண்டு விலை சரிந்துள்ளது. மேலும், கறிக்கோழி கிலோ, 56 ரூபாய் வரை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட போதும் மொத்த விற்பனையில் ஏழு ரூபாய் வரை குறைத்து வழங்கப்பட்டது.
நுகர்வோர் பாதிக்கக் கூடாது என்பதற்காக, கறிக்கோழியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி சீரடைந்தால், கறிக்கோழியின் விலையும் சீரடையும். இவ்வாறு கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|