பதிவு செய்த நாள்
28 பிப்2012
04:43
ஈரோடு:ஈரோடு நகரில் பவானி மெயின்ரோடு ஸ்டார் தியேட்டர் எதிரில், மஞ்சள் வெளி மார்க்கெட் செயல்படுகிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால், காலை 8 மணி துவங்கி, மதியம் 3 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏலக்கூடத்தில் இடப்பற்றாக்குறையும் நிலவுகிறது.இடமாற்றம்நெரிசலை போக்கும் வகையில், மஞ்சள் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. நசியனூர் அருகே, செம்பாம்பாளையம் பகுதியில், 53 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் கூட்டுறவு சொசைட்டிக்கு 5.5 ஏக்கர் ஒதுக்கவும், பணிகள் மேற்கொள்ள, 11.33 கோடி ரூபாய் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக மஞ்சள் இருப்பு வைக்க, பத்து குடோன்கள் கட்டப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கேன்டீன், ஓய்வு அறை, வண்டிகள் நிறுத்துமிடம், முன்பக்கமாக, 80 அடி ரோடு மற்றும் உள் கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. செம்பாம்பாளையத்தில் ஏலம் நடத்த விவசாயிகள் மஞ்சள் சாம்பிளுடன் வரும்படி கோரப்பட்டது.
கண்டனம்:இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. செம்பாம்பாளையத்துக்கு சாம்பிள் எடுத்துச் சென்று, ஏலத்தில் கலந்து, மீண்டும் குடோனுக்கு வந்து, மஞ்சளை விற்று, வியாபாரியிடம் காசு வாங்குவதற்குள், விவசாயிகளுக்கு அலைச்சலும், குவிண்டால் ஒன்றுக்கு, 100 ரூபாய் வரை இழப்பும் ஏற்படும்.
இடப்பற்றாக்குறை:அனைத்து விவசாயிகளும் மஞ்சள் இருப்பு வைக்க போதுமான குடோன், ஒரே இடத்தில் ஏலம், ஏலம் முடிந்ததும் கைமேல் பணம் கிடைக்கும் வகையில், தயார் படுத்திய பின்னர் இடமாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். அதுவரை இங்கு மட்டுமே ஏலம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சென்றவாரம், வெளிமார்க்கெட்டில் இடப்பற்றாக்குறையால், விவசாயிகள் கொண்டு வந்த சாம்பிளை வைக்க இடமில்லாமல் போனது. விவசாயிகள் போராட்டத்தால் மஞ்சள் ஏலம் காலவரையின்றி நிறுத்தப்பட்டது. ஈரோடு ஆர்.டி.ஓ., நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில், அரசின் உத்தரவு வரும்வரை, தற்போதைய நிலவரப்படியே ஏலம் நடத்த உத்தரவிடப்பட்டது.
இதன்படி நேற்று முன்தினம் மஞ்சள் மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டு, ஏலம் நடத்தப்பட்டது. 1,148 சாம்பிள்கள், 3,916 குவிண்டால் மஞ்சள் வரத்து இருந்தது.
மஞ்சள் விவசாயி ஒருவர் கூறியதாவது:மஞ்சள் அறுவடை துவங்கியுள்ளது. பிப்., 15 முதல், மே 15ம் தேதி வரை வரத்து அதிகமாக இருக்கும், இங்கு, 900 சாம்பிள் வைக்க வசதியுள்ளது. மூன்று மாத சீசன் சமயத்தில், நாள் ஒன்றுக்கு, 1,400 சாம்பிள் வரை வரக்கூடும். வியாபாரிகளும் அதிகப்படியாக வருவதால், 4,000 பேர் மார்க்கெட்டில் கூடும் நிலை ஏற்படும். இடப்பிரச்னையும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெளியே ரோட்டில் நிற்கும் சூழல் ஏற்படும். கடந்தாண்டு முன்பக்க மண்டபத்தில், வைத்து ஏலம் விடப்பட்டது. அதுபோல், ஏற்பாடு செய்யலாம் என்றார்.
மஞ்சள் மார்க்கெட் சங்க செயலர் நடராஜ் கூறியதாவது:இங்கிருந்து, செம்பாம்பாளையத்துக்கு செல்லும் போது, சில பாதிப்புகள் வரத்தான் செய்யும்; அது தவிர்க்க முடியாதது. மஞ்rள் வளாகம்:நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பல்வேறு வசதிகளையும், மேலும், ஒரே மாதிரியான ஏலம் நடத்தவும் செம்பாம்பாளையத்தில் ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ஏலம் நடத்தப்படும் போது விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். அரசு தலையிட்டு விரைவில் நல்ல வழி காண வேண்டும் என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|