பதிவு செய்த நாள்
28 பிப்2012
04:46
புதுடில்லி:உலகளவில் நெல் உற்பத்தியில், இந்தியா இரண்டாவது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது. நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டின், நாட்டின் அரிசி ஏற்றுமதி, 61 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, சர்வதேச தானிய கவுன்சில் மறுமதிப்பீடு செய்துள்ளது. இந்த அமைப்பு, நடப்பாண்டில், இந்தியா 50 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யுமென, முதலில் மதிப்பீடு செய்திருந்தது.
பணவீக்கம்:நடப்பாண்டில், நாட்டின் நெல் உற்பத்தி, சிறப்பான அளவில், அதிகரித்திருக்கும் என்ற நிலைப்பாட்டால், அரிசி ஏற்றுமதி முந்தைய மதிப்பீட்டை விட, அதிகரிக்க வாய்ப்புள்ளது என இந்த கவுன்சில் தெரிவித்துள்ளது.2010ம் ஆண்டில், நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகரித்ததையடுத்து, சாதாரண வகை அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்ற 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மீண்டும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டில், இந்தியா, 41 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்திருந்தது.
நெல் உற்பத்தி:நடப்பு 2011-12ம் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் நெல் உற்பத்தி, 10.28 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நம் நாடு நடப்பாண்டில், அதிகளவில் அரிசி ஏற்றுமதி மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரிசி ஏற்றுமதி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதி, 67 லட்சம் டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்நாட்டின் அரிசி ஏற்றுமதி, 1.06 கோடி டன்னாக இருந்தது.
இதே போன்று, வியட்நாம் நாட்டின் அரிசி ஏற்றுமதியும், நடப்பாண்டில், 71 லட்சம் டன்னிலிருந்து, 64 லட்சம் டன்னாகவும், அமெரிக்காவின் ஏற்றுமதி, 33 லட்சம் டன்னிலிருந்து, 30 லட்சம் டன்னாகவும் குறையும் என தெரிகிறது.
அரிசி இறக்குமதி:உலகளவில், இவ்வாண்டு அரிசி இறக்குமதி, 7 சதவீதம் குறைந்து, 3.22 கோடி டன்னாக குறையும் என தெரிகிறது. வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் அரிசி இறக்குமதி குறையும் என்பதே இதற்கு காரணம்.
சீனா மற்றும் இந்தியாவில் நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் ஆண்டில், உலகளவில், நெல் உற்பத்தி 46.30 கோடி டன்னாக அதிரிக்கும் என, சர்வதேச தானிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டு உற்பத்தியை விட, 3 சதவீதம் (45 கோடி டன்) அதிகமாகும்.
சர்வதேச அளவில், நெல் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் பருவம் மாறுபடுகிறது. இந்தியாவில், சந்தைப்படுத்தும் பருவம் என்பது அக்டோபர் முதல், செப்டம்பர் வரை கணக்கிடப்படுகிறது.இந்நிலையில், இந்தியாவிலிருந்து, ஏற்றுமதிக்கான, ஒரு டன் பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, 700 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை - ஜூன்), நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 25 கோடி டன்னாக உயரும் என பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார். பருத்தி உற்பத்தி, 3.40 கோடி பொதிகளாக அதிகரித்து சாஊதனை படைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
கிடங்கு வசதி :உள்நாட்டில் வேளாண் பொருட்களின் பண்ணை விலைக்கும், சில்லரை விற்பனையில் நுகர்வோர் வாங்கும் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், வினியோக திட்ட முதலீடுகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
குறிப்பாக, அழுகும் பொருட்களின் போக்குவரத்து மற்றும் குளிரூட்டு கிடங்கு வசதி போன்றவற்றின் வாயிலாக ஆண்டு முழுவதும் தானியங்களின் விலையை சீராக வைத்திருக்கும் வகையில், இப்பிரிவுகளில் தனியார் முதலீடுகள் அவசியம் என பிரதமர் கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|