பதிவு செய்த நாள்
01 மார்2012
01:56
திருப்பூர்:பருத்தி விலை பாதியாக குறைந்ததால், சாகுபடி செலவைக் கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மண் வளம், சீதோஷ்ண நிலை காரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.
அதையொட்டி உருவான நூற்பாலைகள் சிறப்பாக இருந்தன. பருத்தி சாகுபடியை திடீரென தாக்கிய வெள்ளை ஈ; சீதோஷ்ண நிலை மாற்றம்; வருவாய் குறைவு போன்ற காரணங்களால் பருத்தி சாகுபடியை விவசாயிகள் தவிர்த்தனர்.தற்போது, பருத்தி சாகுபடி மீது விவசாயிகள் மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருப்பூர், ஊத்துக்குளி, பொங்கலூர், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி துவங்கியுள்ளது.
இப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆறு மாத பயிர், குறைந்த தண்ணீர் தேவை, அதிக வருமானம் என, ஆர்வமாய் களமிறங்கிய விவசாயிகள், அறுவடை சமயத்தில் விலை சரிந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விதைப்பு சமயத்தில் கிலோ 67 ரூபாய்க்கு விற்ற பருத்தி, தற்போது 35 ரூபாயாக குறைந்துள்ளது. இத்துடன், மகசூலும் குறைந்துள்ளதால் சாகுபடிக்காக செய்த முதலீட்டை திரும்ப எடுக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இது குறித்து விவசாயி வரதராஜ் கூறியதாவது:ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய், நான்கு முறை மருந்து, களை எடுத்தல் என ஏக்கருக்கு தற்போது 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. மேலும், அறுவடைக்கு ஆட்கள் செலவு உள்ளது. ஆறு மாதத்துக்கு முன் ஒரு கிலோ பருத்தி 67 ரூபாயாக இருந்தது. இதனால், நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். அறுவடை சமயத்தில் விலை பாதியாக குறைந்துள்ளது.
வழக்கமாக ஏக்கருக்கு 700 கிலோ வரை பருத்தி மகசூல் இருக்கும். தற்போது, மகசூலும் குறைந்துள்ளது. அறுவடை செய்தால், சாகுபடிக்கு செலவழித்த தொகையைக் கூட திரும்ப எடுக்க முடியாது. ஏக்கருக்கு 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. பருத்திக்கு உரிய விலை கிடைக்கவும், விலை நிர்ணயம், விற்பனை சந்தை, சாகுபடி தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர். இவ்வாறு வரதராஜ் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|