பதிவு செய்த நாள்
08 மார்2012
00:10
புதுடில்லி: மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்ததன் பின்னணியில் உள்ள பல திடுக்கிடும் தகவல்கள், தற்போது மெல்ல கசியத் தொடங்கியுள்ளன.உற்பத்திநாட்டின் பருத்தி உற்பத்தி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில் 3.45 கோடி பொதிகளாக (1 பொதி-170 கிலோ) இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், சென்ற ஆண்டு கையிருப்பு (48.30 லட்சம் பொதிகள்), இறக்குமதி (6 லட்சம் பொதிகள்) ஆகியவை உட்பட, நாட்டின் மொத்த பருத்தி வினியோகம் 3.99 கோடி டன்னாக இருக்கும் என, பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், 84 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதியாகும் என மதிப்பிட்டிருந்த நிலையில், மார்ச் 1ம் தேதி வரையிலுமாக இலக்கை விஞ்சி, 94 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி ஆகியுள்ளது.தேவைஉள்நாட்டில் பருத்திக்கான தேவை குறைந்ததால், அதன் விலை சரிவடைந்துள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் பருத்தியை ஏற்றுமதி செய்யத் துவங்கினர். ஆனால், இந்த ஏற்றுமதி, பதுக்கலுக்கு வழி வகுத்துள்ளதுதான், மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க முக்கிய காரணம். மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் போவது பற்றி முன்கூட்டியே அறிந்த 5 நிறுவனங்கள், சென்ற பிப்ரவரி மாதத்தில் மள மள வென, 11 லட்சம் பருத்தி பொதிகளை ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள அவற்றின் துணை நிறுவனங்களுக்கே ஏற்றுமதி செய்துள்ளன.அம்மாதத்தில் நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த பருத்தி ஏற்றுமதியில் 92 சதவீதம், வெளிநாடுகளில் உள்ள அவற்றின் துணை நிறுவனங்களுக்கே அனுப்பி வைத்துள்ளன என தெரியவந்துள்ளது.மதிப்பீடுஏற்கனவே, பருத்தி ஏற்றுமதி, மதிப்பீட்டை விஞ்சியுள்ள நிலையில், மேலும் ஏற்றுமதிக்கு அனுமதித்தால், அது உள்நாட்டில் பருத்திக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கும். விலை உயர்வுக்கும் வழி வகுத்து விடும் என்பதால், மத்திய அரசு உடனடியாக பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.உதாரணமாக, இதுவரை 1.20 கோடி பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை, 94 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதியாகி உள்ளன. இந்நிலையில்,மேலும் 26 லட்சம் பொதிகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்தால், மத்திய அரசின் பருத்தி கையிருப்பு, 50 லட்சம் பொதிகள் என்ற அளவில் இருந்து 10 லட்சம் பொதிகளாக குறைந்து விடும்.இதனால், உள்நாட்டில் வரும் 2012-13ம் சந்தை பருவம் (அக்.,- செப்.,) துவங்கும் வரை பருத்திக்கு தட்டுப்பாடு நிலவும்.இத்தகைய நிலை ஏற்படும் பட்சத்தில், அது, வெளிநாட்டு துணை நிறுவனங்களில் பருத்தியை பதுக்கி வைத்துள்ள இந்திய நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். அதாவது, இந்நிறுவனங்கள், துணை நிறுவனங்களிடம் இருந்து பருத்தியை இறக்குமதி செய்து, கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுக்கும். எப்போதும் தும்பை விட்டு விட்டு, வாலை பிடிக்கும் மத்திய அரசு, கடந்த 2010ம் ஆண்டு வெங்காய விவகாரத்தில் ஏற்பட்டது போன்ற நிலையை தவிர்க்க, இந்த முறை துரிதமாக செயல்பட்டுள்ளது. இதனால், ஜவுளி துறையினரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.ஆனால், மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், வேளாண் துறை அமைச்சருமான சரத்பவாருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள்மத்திய அரசு, வேளாண் அமைச்சரான தம்மை கூட கலந்தாலோசிக்காமல், திடீரென பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாகவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.ஆனால் சரத்பவார், டெல்லியில் அப்போது இல்லை என்பதாலும், தாம் இந்தோனேஷியா செல்லவிருந்ததாலும், அமைச்சரவை குழுவை கூட்டாமல் உடனடியாக பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.ஒட்டுமொத்தத்தில், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து வேளாண் துறை அமைச்சருக்கு தெரிவிக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பது தெரிகிறது. அதற்கு, கடந்த காலத்தில், சர்க்கரை, வெங்காயம் ஆகியவற்றின் விலை உயர்வும், அதற்கான பின்னணியில் வேளாண் அமைச்சகமும் இருந்தது தான் காரணம் என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சகங்களுக்கிடையில் மோதல்
பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மத்திய வர்த்தக அமைச்கத்திற்கும், வேளாண் அமைச்சகத்திற்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, பருத்தி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக, மத்திய அமைச்சரவை குழு கூடி முடிவெடுக்கும்படி, பிரதமர் உத்தரவிட்டுள்ளார். நாளைய கூட்டத்தில் இதற்கு சுமூக முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|