பதிவு செய்த நாள்
09 மார்2012
10:34
கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் இரும்புக் கம்பிகளின் விலை, வரலாறு காணாத வகையில், கடந்த ஒன்பது மாதங்களில் டன்னுக்கு 11,900 ரூபாய் அதிகரித்து, தற்போது, 53,500 ரூபாயாக உள்ளது. இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக, விற்பனையாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.
செயில் (எஸ்.ஏ.ஐ.எல்.,), விசாக், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டுமான கம்பிகள் தயாரிப்பில் முன்னிலை வகித்து வந்தன. தற்போது, ஏராளமான நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இறங்கியுள்ளன. தமிழகத்தில், 80 தனியார் வார்ப்பாலைகள் செயல்படுகின்றன. மாநிலத்தின் கம்பி தேவையில், 70 சதவீதம் இந்த ஆலைகள் மூலம், பூர்த்தி செய்யப் படுகிறது.
வரலாறு காணாத உயர்வு : கடந்த 2008ம் ஆண்டின் மத்தியில், அதிகபட்சமாக ஒரு டன், 48 ஆயிரம் ரூபாயாக இருந்தது. மத்திய அரசு எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக, கம்பி விலை படிப்படியாக குறையத் துவங்கியது.
2009ம் ஆண்டின் துவக்கத்தில், 28 ஆயிரம் ரூபாய்க்கு வந்த விலை, மீண்டும் ஏறுமுகம் கண்டது, 2010ம் ஆண்டில் 38 ஆயிரம் ரூபாயாகவும், ஜூலை 2011ல் 41,600 ரூபாயாகவும் உயர்ந்தது. இதுவே, தற்போது, 53,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள், ஒரு டன் கம்பி விலையை, 56 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து உள்ளன.
காரணம் என்ன? : இது குறித்து, உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: கச்சா இரும்புத் தாதுவை, நிலக்கரியுடன் சேர்த்து உருக்கி கம்பிகளாக வார்க்கும் வசதி, பெரிய ஆலைகளில் மட்டும் உள்ளது. இத்தகைய வசதி இல்லாத சிறிய ஆலைகள், கச்சா இரும்பு மட்டுமல்லாது, கண்டம் செய்யப்பட்ட இரும்பையும் கம்பிகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றன.
கச்சா இரும்பை நிலக்கரியுடன் சேர்த்து உருக்கும் பணியை எளிதாக்க, "ஸ்பான்ஜ் அயன்' என்ற வகை இரும்பை பயன்படுத்த வேண்டும். ஆந்திர - கர்நாடக எல்லையில் உள்ள ரெய்ச்சூரிலும், சத்தீஸ்கரிலும் மட்டுமே, இந்த வகை இரும்பு கிடைக்கிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை, இதன் தட்டுப்பாடு காரணமாக, கம்பிகளின் விலை உயர்த்தப் படுவதாக, உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. தற்போது, இந்த இரும்பு கிடைத்து வரும் நிலையில், கம்பி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் நிலவும் மின்சாரம் மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, உருக்காலைகளின் உற்பத்தி பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு, 200 டன் அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய ஆலைகளில், தற்போது, 40 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், மின்வெட்டு காரணமாக ஒரு மாதத்தில், 10 முதல், 12 நாள்கள் மட்டுமே முழு அளவிலான உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன. இதனால், உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது, ஆனால், தேவை குறையவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடுத்தவாரம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், இரும்பு பொருள்கள் மீதான உற்பத்தி வரி, 2 சதவீதம் வரை உயர்த்தப் படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரி உயர்ந்தால், இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என, கட்டுமானத் துறையினர் அதிர்ச்சி தெரிவித்தனர்.
தனியார், அரசு திட்டங்கள் முடங்கும் : கம்பி விலை உயர்வு குறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின், முன்னாள் மாநிலத் தலைவர், எல்.மூர்த்தி கூறியதாவது: இந்த விலை உயர்வு, குறைந்த பரப்பளவில் வீடு கட்டுவோர் முதல், பெரிய திட்டங்களில் வீடு வாங்குவோர் வரை, எல்லா நிலைகளிலும் பொது மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி, அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளுக்காக மேற்கொள்ளப்படும் பாலங்கள், குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றின் செலவு அதிகமாகும்.
தற்போது, இத்திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களுக்காக அரசு, ஒரு டன் கம்பி விலை, 42 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது. கம்பி விலை உயர்வால், இத்தகைய திட்டப்பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விலை உயர்வால் நிர்ணய விலையை மறுபரிசீலனை செய்ய அரசில் வசதி உள்ளது, ஆனால், இது நிதி நிலை அறிக்கைக்கு பிறகே நடக்கும் என்பதால், அதுவரை திட்டங்கள் கிடப்பில் போடப்படும் வாய்ப்பு உள்ளது.
கம்பி விலை கடந்துவந்த பாதை...
ஆண்டு 2007 - ரூ. 25,000 (டன்னுக்கு)
ஆண்டு 2008 - ரூ. 48,000 (டன்னுக்கு)
ஆண்டு 2009 - ரூ. 28,000 (டன்னுக்கு)
ஆண்டு2010 - ரூ. 38,000 (டன்னுக்கு)
ஆண்டு 2011 - ரூ. 41,600 (டன்னுக்கு)
ஆண்டு 2012 - ரூ. 53,500 (டன்னுக்கு)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|