பதிவு செய்த நாள்
11 மார்2012
23:58
தமிழகத்தில், தொழிற்சாலைகளை தொடர்ந்து, மாவட்டத்தில் இயங்கி வரும் விசைத்தறிகளுக்கும் வாரத்திற்கு ஒரு நாள் மின்சார விடுமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், இத்துறை சார்ந்த கூலித்தொழிலாளர்கள் வருமானமின்றி அவதிப்படுகின்றனர்.மாநிலத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்சாலை களுக்கான மின்சார வார விடுமுறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் விசைத்தறி தொழிலுக்கும் வாரத்துக்கு, ஒரு நாள் மின்சார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெசவாளர் குடும்பங்கள்:இதற்கான உத்தரவை,அனைத்து விசைத்தறி உரிமையாளர்களுக்கும், மின் வாரிய ஊழியர்கள் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நரசிங்கபுரம், பள்ளிப்பட்டு, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம், ராஜாநகரம், அத்திமாஞ்சேரிபேட்டை, சொரக்காய்ப்பேட்டை, பொதட்டூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில் நெசவு. இம்மாவட்டத்தில் மட்டும், 8,394 விசைத் தறிகள் உள்ளன. இதன் மூலம், 5,790 விசைத்தறி நெசவாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.நெசவாளர்கள் தொடர்ந்து விசைத்தறிகளை இயக்கினாலே, ஒரு நாளுக்கு, 150 ரூபாய் தான் கூலி கிடைக்கும். இந்நிலையில் தினமும் அதிகபட்சம், 8 மணி நேரம் மின்தடை உள்ளது. இது போதாதென்று, மின்சார வார விடுமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது.
இதன்படி, திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியில் செவ்வாய் கிழமை, பொதட்டூர்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் பகுதியில் சனிக்கிழமை என விசைத்தறிகளுக்கு மின்சார விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
வருமானம்:இதை விசைத்தறி உரிமையாளர்கள் கடைபிடிக்கின்றனரா என, அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்யவும் உள்ளனர். ஒருநாள் வருமானம் முற்றிலும் குறைந்ததால், விசைத்தறி நெசவாளர்கள் கஞ்சி குடிக்கும் அவலத்தில் உள்ளனர்.இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத மின்வாரிய இளநிலை பொறியாளர் ஒருவர் கூறும்போது, "அரசின் உத்தரவை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். அதன்படி, விசைத்தறிகளுக்கும், வாரத்தில் ஒருநாள் மின்சார விடுமுறை அறிவிப்பு உத்தரவை, அதன் உரிமையாளர்களுக்கு வழங்கி உள்ளோம்' என்றார்.
- என்.ஆனந்தன் -
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|