பதிவு செய்த நாள்
17 மார்2012
10:18
சென்னை:மேல்அடுக்கு வான்வெளி வழிகாட்டுதல் தொழில் நுட்பத்தை, சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு, சர்வதேச விருது கிடைத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் மட்டுமே, இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின், வான்வெளி வழிகாட்டு சேவை அமைப்பின் சார்பில், சென்னை விமான நிலையத்தில், கடந்தாண்டு, மேல்அடுக்கு வான்வெளி வழிகாட்டுதலில், புதிய முறை அமல்படுத்தப்பட்டது. இப்புதிய தொழில் நுட்பத்தின்படி, தென்னிந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஐதராபாத், பெல்லாரி (ரேடார்), மங்களூரு, பெங்களூரு, கொச்சின், திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்கள், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் மூலம், சிக்கல் இல்லாத வான்வெளி போக்குவரத்து மேலாண்மை, பயணிகள் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட பல பயன்கள் கிடைத்துள்ளன.
இப்புதிய தொழில் நுட்பம், சிறந்த முறையில் செயல்படுவது குறித்த அறிக்கையை, விமான போக்குவரத்து துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் அமைப்புகளுக்கு, விருது வழங்கும் ஜேன்ஸ் அமைப்பிற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் அனுப்பியது. அனைத்து தகவல்களையும் ஆய்வு செய்த அந்த அமைப்பு, மேல்அடுக்கு வான்வெளி வழிகாட்டும் தொழில் நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, 2012ம் ஆண்டுக்கான ஜேன்ஸ் விருதை இந்திய விமான நிலையத்திற்கு வழங்கியுள்ளது.
இது குறித்து வான்வெளி வழிகாட்டும் அமைப்பின் (ஏ.என்.எஸ்.) உறுப்பினர் சோமசுந்தரம் கூறியதாவது:விமான போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், சிக்கனமானதாகவும் மாற்றும் வகையில், ஒரு புதிய தொழில் நுட்பம் கடந்தாண்டு சென்னை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ், தென்னிந்தியாவின் அனைத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின், பெருமைக்குரிய ஜேன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
இப்புதிய தொழில் நுட்பத்தின் கீழ் விமானங்களுக்கு சிறப்பான முறையில் வழிகாட்டியதன் மூலம், 22.3 மில்லியன் லிட்டர் எரிபொருளும், 29.9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு நிதியும் சேமிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மும்பை, டில்லி மற்றும் கோல்கட்டா உள்ளிட்ட நான்கு விமான தகவல் மண்டலங்களிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் டிசம்பருக்கும் இப்பணிகள் நிறைவடையும். அடுத்தாண்டு துவக்கத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும்.இவ்வாறு சோமசுந்தரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|