விமான போக்குவரத்தில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்:இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சர்வதேச விருதுவிமான போக்குவரத்தில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்:இந்திய விமான நிலைய ... ... மத்திய பட்ஜெட் எதிரொலி: நகைக் கடைகள் அடைப்பு:1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு மத்திய பட்ஜெட் எதிரொலி: நகைக் கடைகள் அடைப்பு:1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை ... ...
மத்திய பட்ஜெட்டால் பங்குச் சந்தையில் கடும் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2012
23:47

நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஐந்து நாள் நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
குறிப்பாக, உலகின் பல்வேறு நாடுகளில், பங்கு வர்த்தகம் சூடுபிடித்ததையடுத்து, அவ்விரு தினங்களிலும் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் சிறப்பாக இருந்தது.ஆனால், வரும் 2012-13ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு, வெள்ளியன்று இந்திய பங்குச் சந்தைகளில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. அன்றைய தினம், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 210 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நடப்பு வாரத்தில் மட்டும் "சென்செக்ஸ்' 121 புள்ளிகள் குறைந்து, 17,466 புள்ளிகளில் நிலைபெற்றது.
சரிவிற்கு காரணம்:வெள்ளியன்று காலையில் பங்கு வர்த்தகம் துவங்கியபோது, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து, வர்த்தகம் நன்றாகவே இருந்தது. ஆனால், மத்திய பட்ஜெட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற காரணத்தால், வர்த்தகம் படிப்படியாகச் சரிவடைந்து போனது. குறிப்பாக, சேவை வரி மற்றும் உற்பத்தி வரி தலா 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டதால், அது நிறுவனங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்ற நிலைப்பாட்டாலும், நிறுவனங்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படவில்லை என்ற காரணத்தாலும் பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.
மேலும், பங்கு பரிவர்த்தனை வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டு, 0.125 சதவீதத்திலிருந்து 0.10 சதவீதமாக குறைக் கப்பட்டுள்ளது. ஆனால், பங்கு பரிவர்த்தனை வரியை நீக்க வேண்டும் அல்லது 40 சதவீதம் குறைக்க வேண்டும் என பங்குத் தரகு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.இது, நிறைவேறாததாலும், பங்குச் சந்தையில் கடும் தாக்கத்தை அது ஏற்படுத்தியது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், இந்த வரி மூலம் அரசுக்கு 7,500 கோடி ரூபாய் கிடைத்தது.புதிய வரி விதிப்பின்படி, ஒரு கோடி ரூபாய் அளவிற்கான பங்கு பரிவர்த்தனைக்கு (விற்பது மற்றும் வாங்குவது) 10 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். இது தற்போது, 12,500 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
பங்கு சேமிப்பு திட்டம்:வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சிறிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில், அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளும் வகையில், ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி, 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்பவர்கள், இத்தொகையில் 50 சதவீதத்திற்கு வருமான வரிச் சலுகை பெற முடியும். ஆனால், இந்த முதலீட்டை குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்கு எடுக்கக் கூடாது.
ஆண்டு வருவாய் 10 லட்சத்திற்கு குறைவாக இருப்பவர்கள், இத்திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம். இந்த அறிவிப்பும், பங்குச் சந்தையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.சென்ற வெள்ளியன்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்த நிலையிலும், மத்திய பட்ஜெட்டால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இறங்குமுகமாகவே இருந்தது.
மத்திய பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வரும் நிதியாண்டில், வேளாண் துறை மேம்பாட்டிற்காக 5.75 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டைவிட, 1 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும்.
குறுகிய கால பயிர்க்கடனுக்கு, 7 சதவீத வட்டி தொடரும் என்ற அறிவிப்பும், கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத் தினால், 3 சதவீத வட்டி தள்ளுபடியும் கிடைக்கும். இவை தவிர, விவசாயத் துறையில், ஆராய்ச்சிப் பணிகளுக்கு 200 கோடி ரூபாயும், நீர்பாசனத் திட்டத்திற்கு, 14 ஆயிரத்து 242 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை சாதனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு, சுங்க வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற வற்றால், வேளாண் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை உயரும்.
காப்பீட்டு துறை:சேவை வரி, 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இத்துறை நிறுவனங்கள் வரும் நிதியாண்டில், கூடுதலாக, 800 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இருப்பினும், கிராமப்புறங்களிலிருந்து, வசூல் செய்யப்படும் பிரிமிய கட்டணங்களுக்கு சேவை வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இதன் வாயிலாக, இத்துறை நிறுவனங்களுக்கு, 40 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகை கிடைக்கும்.
முன்கூட்டிய வரி:நடப்பு 2011-12ம் நிதியாண்டிற்கான கடைசி தவணையில் (மார்ச் 15ம் தேதி) நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டி வரி, இதே காலத்தில் செலுத்தப்பட்டதை விட, கணிசமாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு நிதி யாண்டின் நான்காவது காலாண்டில், நிறுவனங்களின் லாபம் அதிகரித்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள் ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செலுத்திய முன்கூட்டிய வரி, இக்காலாண்டில், 10 சதவீதம் அதிகரித்து, 1,650 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த ஆண்டின் கடைசி காலாண்டைவிட, 40 கோடி ரூபாய் அதிகரித்து 976 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலாண்டுகளில், டி.சி.எஸ். நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி, 200 கோடியிலிருந்து 550 கோடி ரூபாயாகவும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முன்கூட்டிய வரி, 250 கோடி யிலிருந்து 290 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
அல்ட்ராடெக் நிறுவனத்தின் முன்கூட்டிய வரி, 120 கோடியிலிருந்து 170 கோடி ரூபாயாகவும், அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முன்கூட்டிய வரி, 170 கோடியிலிருந்து 250 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதுவரையிலுமாக பல நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டை விட, நல்ல அளவில் அதி கரித்துள்ளது. எனவே, இது போன்ற நிறுவனப் பங்குகளை ஆராய்ந்து, முதலீடு செய்யலாம்.
30 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு:மத்திய அரசு, வரும் 2012-13ம் நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30 ஆயி ரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இவ்வகையில், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், இதுவரை 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்தது. வரும் நிதியாண்டில் பங்கு வர்த்தகம் நன்கு இருக்கும் நிலையில், நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 30 ஆயிரம் கோடி ரூபாயை அரசால் திரட்ட முடியும். ஆனால், பங்குகளின் விலை நியாயமாக இல்லாவிட்டால், அது அரசுக்கு மட்டுமின்றி, முதலீட்டாளர்களையும் பாதிக்கும்.
வரும் வாரம் எப்படி இருக்கும்?:நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில், பல சாதக, பாதக அம்சங்கள் உள்ளன. இருப்பினும், அடிப்படைக் கட்டமைப்பு, வேளாண் துறை, வங்கி, விமானச் சேவை, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால், வரும் வாரத்தில், பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றாலும், உலக பங்குச் சந்தை நிலவரங்களைப் பொறுத்தே இது அமையும்.
- திருமை. பா. ஸ்ரீதரன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)