பதிவு செய்த நாள்
18 மார்2012
23:49
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மின் உற்பத்தியில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் 75 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் மின் உற்பத்தி 5.4 சதவீதம் அதிகரித்து, 85 ஆயிரத்து 500 கோடி யூனிட்டுகளாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இலக்கு:இதில், நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர்), 65 ஆயிரத்து 344 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 76 சதவீதமாகும்.கடந்த 2010-11ம் நிதியாண்டின், இதே காலத்தில் 59 ஆயிரத்து 824 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் மின் உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், 9.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் 4.2 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், அணு மின் உற்பத்தி 33.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், நீர் மற்றும் அனல் மின் நிலையங்களின் மின்சார உற்பத்தி முறையே 19.2 சதவீதம் மற்றும் 6.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
அனல்மின் நிலையங்கள்:நடப்பு நிதியாண்டின், சென்ற டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில், ஒட்டுமொத்த அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறன், 72.1 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் 72.9 சதவீதம் என்ற அளவில் சற்றே அதிகரித்து காணப்பட்டது.நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12), அணு, அனல் மற்றும் நீர் மின் நிலையங்களின் உற்பத்தி திறனில், 78 ஆயிரத்து 799 மெகாவாட் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இது மறுமதிப்பீட்டில், 62 ஆயிரத்து 374 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது.
இதன்படி, அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி திறன் 50 ஆயிரத்து 757 மெகாவாட்டாக நிர்ணயிக்கப் பட் டுள்ளது. இதில், நடப்பாண்டு ஜனவரி வரை அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி திறன், 46 ஆயிரத்து 670 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில், நீர் மற்றும் அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தி திறனை முறையே, 8,237 மெகா வாட் மற்றும் 3,380 மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மரபு சாரா எரிசக்தி :மத்திய அரசு, நாட்டின் மின் உற்பத்தியை பாரம்பரிய முறையிலும், மரபு சாரா எரிசக்தி வாயிலாகவும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி, மாசற்ற சுற்றுச்சூழலில் அதிக அள வில் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்காக மெகா மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த தீர்மானித்துள்ளது.கடந்த 2007ல், இவ்வகை திட்டங்கள் வாயிலாக 4,000 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு ஏற்கனவே மத்தியபிரதேசத்தில் சாசன் என்ற இடம் தேர்வு செய்யப் பட்டு, மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது போன்று, குஜராத்தில் முந்த்ரா, ஆந்திராவில் கிருஷ்ணபட்டினம், ஜார்கண்டில் திலையா ஆகிய இடங்களில் மெகா மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முந்த்ரா: இவற்றுள், முந்த்ராவில் முதற்கட்டமாக 800 மெகாவாட் மின் உற்பத்தி பிரிவு செயல்படத் துவங்கியுள்ளது. எஞ்சிய மூன்று மெகா மின் உற்பத்தி நிலையங்களில், வரும் ஐந்தாண்டு திட்ட காலத்தில் மின் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், எரிசக்தி துறை சார்ந்த திட்டங்களுக்கு, 1 லட்சத்து 47 ஆயிரத்து 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது, வரும் 2012-13ம் நிதியாண்டிற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 842ரூபாயாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|