பதிவு செய்த நாள்
23 மார்2012
01:06
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, யூனிநார் நிறுவனத்தின் "2ஜி' உரிமம் ரத்தாவதைப் பற்றி கவலைப்படாமல், லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் இதன் மொபைல்போன் சேவையை பெற்று வருகின்றனர்.கடந்த 2008ம் ஆண்டு, "2ஜி' அலைவரிசை உரிமம் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக, சென்ற பிப்ரவரி 2ம் தேதி, 122 உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. நான்கு மாதங்களுக்குள், பழைய உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய உரிமங்களுக்கான ஏலம் நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், யூனிநார், சிஸ்டெமா ஷியாம், எடிசலாட் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நார்வேயின் டெலிநார் நிறுவனம், யூனிநார் நிறுவனத்தில் இருந்தும், இந்திய தொலைத்தொடர்பு சேவையில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தது.
போட்டி நிறுவனங்கள்:இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் மொபைல்போன் சந்தாதாரர்களை இழுக்கும் முயற்சியை, போட்டி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.இந்த நிலையிலும், சென்ற பிப்ரவரியில் யூனிநார் நிறுவனத்தின் மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை 23.4 லட்சம் அதிகரித்து, 4 கோடியே 11 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஜனவரி மாதத்தை விட குறைவு (25 லட்சம்) என்ற போதிலும், இதர நிறுவனங்களின் (ஐடியா செல்லுலார் நீங்கலாக) சந்தாதாரர் சேர்க்கையை விட, இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற பிப்ரவரியில் ஐடியா செல்லுலார் 25.8 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் பார்தி ஏர்டெல் (18.2 லட்சம்) உள்ளது. அடுத்த இடங்களில் வோடபோன் (8.4 லட்சம்), வீடியோகான் (3.5 லட்சம்), சிஸ்டெமா (2.3 லட்சம்) ஆகியவை உள்ளன.தற்போது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்கள்,
ப்ரீபெய்டு சேவையையே தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட "சிம்' கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இது தவிர, ஒரே எண்ணில் வேறொரு நிறுவனச் சேவையை பெறும் நம்பர் போர்ட்டபிளிட்டி வசதியும் உள்ளது.
புதிய உரிமம்மேலும், இத்துறையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதால், புதிய உரிமத்திற்கான ஏலத்திலும் யூனிநார் போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
அதனால், இத்தகைய நிறுவனங்களின் "2ஜி' உரிமம் தற்காலிகமாக ரத்தாவதைப் பற்றி கவலைப்படாமல், கவர்ச்சிகரமான கட்டணங்களால் ஈர்க்கப்பட்டு புதிய வாடிக்கையாளர்கள் சேவையை பெறுகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, நான்கு மாதத்திற்குள் மொபைல்போன் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து விட்டு புதிய உரிமத்திற்கு ஏலம் விட முடியாதென்றும், குறைந்தது 400 நாள் அவகாசம் வேண்டுமென்றும் தொலைத்தொடர்புத் துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஆனால், இந்த காலதாமதம், மேலும் இழப்பை உண்டாக்கும் என்பதால், குறித்த காலத்திற்குள், உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என யூனிநாரில் இருந்து வெளியேறும் டெலிநார் எதிர்மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|