பதிவு செய்த நாள்
23 மார்2012
01:10
மும்பை:தங்க நகைகளுக்கு அவற்றின் மதிப்பில் 60 சதவீதத்திற்கு மேல் கடன் வழங்கக் கூடாது என, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தங்க நகைக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அண்மை காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன்படி, தங்கக் கட்டிகள், தங்கம் மற்றும் தங்க நாணயங்களுக்கு கடன் வழங்க வேண்டாம் என, நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், நிதி நிறுவனங்களின் மொத்த சொத்தில், தங்க நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன் எத்தனை சதவீதம் என்பதை, ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இத்துடன், வரும் ஏப்ரல் முதல், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், (குறிப்பாக, மொத்த நிதி சொத்தில், 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் தங்க நகைக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள்), அவற்றின் சொத்தில் குறைந்தபட்சம் 12 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, தங்க நகைக் கடன் வர்த்தகத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாக உள்ளது என்றும், இது இத்துறையில் ஈடுபட்டுள்ள நிதி நிறுவனங்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் எனவும் இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்க நகைக் கடன் வர்த்தகம் மீண்டும் அமைப்பு சாரா துறைக்கு சென்று விடும் என்றும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அண்மைக்காலமாக, தங்க நகைக் கடன் வர்த்தக நிறுவனங்கள் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகின்றன. வட்டிக் கடையில் தங்க நகை அடமானத்திற்கு அளிக்கும் கடனை விட, இந்நிறுவனங்கள் அதிக தொகையை வழங்குகின்றன.இதனால், முன்னேற்றம் கண்டு வரும் இந்நிறுவனங்கள் பங்கு வெளியீடு, பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடு என பல வகைகளில் நிதி திரட்டத் தொடங்கியுள்ளன.
அதிக இடர்ப்பாடும், நிலையற்ற விலையும் கொண்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனங்களால், பொதுமக்களின் முதலீட்டிற்கு பாதிப்பு நேரக்கூடாது என்ற நோக்கத்தில் ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே சமயம், இத்துறை சீரான வளர்ச்சி பெறவும் இந்நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|