பதிவு செய்த நாள்
23 மார்2012
01:16
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. காலையில் லேசான சரிவுடன் துவங்கிய பங்கு வர்த்தகம், பிற்பகலில் பெரும் சரிவைக் கண்டது. அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.
இது தவிர, சீனாவின் தயாரிப்புத் துறை வளர்ச்சி தொடர்ந்து ஐந்து வாரங்களாக சரிவடைந்து வருகிறது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மின்சாரம், உலோகம், பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை 4 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தது. மொத்தம் 3,003 நிறுவனப் பங்குகளின் மீது வர்த்தகம் நடைபெற்றது.
இதில், 1,974 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 918 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 111 நிறுவனப் பங்குகளின் விலை மாற்றமின்றியும் இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 405.24 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,196.47 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,687.01 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,136.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், கோல் இந்தியா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்து போனது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 136.50 புள்ளிகள் சரிவடைந்து, 5,228.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 5,385.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,205.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|