பதிவு செய்த நாள்
23 மார்2012
01:23
நடப்பு 2011-12ம் ஆண்டு எண்ணெய் பருவத்தில் (நவம்பர்-அக்டோபர்), நாட்டின் சமையல் எண்ணெய் உற்பத்தி 4.6 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில்லரை விற்பனை சந்தையில் சமையல் எண்ணெய் விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நடப்பு ரபி பருவத்தில் (நவம்பர்-மார்ச்), சமையல் எண்ணெய் உற்பத்தி, 88 லட்சம் டன்னாக சரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே பருவத்தில், 99 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆக, நடப்பு பருவத்தில், இதன் உற்பத்தி 11 லட்சம் டன் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்கள்:அதேசமயம், இதே காலத்தில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, 91 லட்சம் எக்டேரிலிருந்து, 97 லட்சம் எக்டேராக அதிகரித்துள்ளது. இருப்பினும், எள் மற்றும் கடுகு எண்ணெய் வித்துகள் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளதால், ஒட்டு மொத்த அளவில் இதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை, கரீப் பருவத்திலும் தொடரும் என மத்திய எண்ணெய் நிறுவன மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (சி.ஓ.ஓ.ஐ.டி.) தெரிவித்துள்ளது.உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி குறைந்துள்ளதால், சந்தைகளுக்கு இதன் வரத்து குறைந்து, விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாவர எண்ணெய்:குறிப்பாக, கடந்த ஆண்டு, 85 லட்சம் டன்னாக இருந்த தாவர எண்ணெய் உற்பத்தி, நடப்பாண்டில் 4 லட்சம் டன் குறைந்து, 81 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில், சமையல் எண்ணெய் இறக்குமதி, ஒட்டு மொத்த அளவில் 1 கோடி டன்னை தொடும். இது, கடந்த ஆண்டு இறக்குமதியை விட மிக அதிகம் என சி.ஓ.ஓ.ஐ.டி கூட்டமைப்பின் துணைத் தலைவர் அசோக் சேத்தியா தெரிவித்தார்.
இந்த கூட்டமைப்பின் மதிப்பீட்டின் படி, நடப்பு 2011-12ம் பருவத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 91-94 லட்சம்
டன்னாக இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளது. இது, கடந்த 2010-11ம் ஆண்டில், 87 லட்சம் டன்னாக இருந்தது.வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக மலேசியா போன்ற நாடுகளிலிருந்து, அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
சுத்திகரிப்பு திறன்:இதன் காரணமாக, உள்நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு ஆலைகள் செயல்படாமல் உள்ளன. நாட்டின், 3 கோடி டன் மொத்த சுத்திகரிப்பு திறனில் தற்போது, 90 லட்சம் முதல் 1 கோடி டன் வரையில்தான் செயல்பாட்டில் உள்ளது. இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளுக்கு வரி விதிக்காத நிலையில், இதன் இறக்குமதி மேலும் அதிகரித்து, நாட்டின் சுத்திகரிப்பு திறன் மேலும் சரிவடையும் என அதானி வில்மர் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அங்சூ மாலிக் தெரிவித்தார்.
நடப்பு 2012ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், 8 லட்சத்து 75 ஆயிரத்து 649 டன் தாவர எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியுடன் ஒப்பிடுகையில், 59 சதவீதம் (5 லட்சத்து 50 ஆயிரத்து 901 டன்) அதிகமாகும். சென்ற பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெயின் பங்களிப்பு 8 லட்சத்து 72 ஆயிரத்து 293 டன்னாகவும், சமையல் சாரா எண்ணெயின் பங்களிப்பு 3,356 டன்னாகவும் உள்ளது என இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், 1 லட்சத்து 10 ஆயிரம் டன்னாக இருந்த சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, தற்போது, 3 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என அந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.இது தவிர, கச்சா பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் மற்றும் கனோலா எள் எண்ணெய் ஆகியவை இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பற்றாக்குறை:நடப்பாண்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைந்து போயுள்ளதால், உள்நாட்டில் இதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டு சந்தைகளில், சில்லறை விற்பனையில், இதன் விலை லிட்டருக்கு, 2-3 ரூபாய் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், இறக்குமதியாகும் பொருட்களுக்கான சுங்க வரி
2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, மேலும் விலை உயர வழி வகுக்கும் என கோகுல் நிறுவனத்தின் துணைத் தலைவர் (நிறுவன திட்டமிடல்) பிரவீன் கண்டல்வால் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|