பதிவு செய்த நாள்
25 மார்2012
00:15
நாமக்கல்:தமிழகத்தில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதால், நுகர்வோர் மகிழ்ச்சியும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில், ப.வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பொத்தனூர், பிலிக்கல்பாளையம், சோழசிராமணி, நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய காவிரிக்கரையோர பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
அங்கிருந்து பெறப்படும் உரிக்கப்பட்ட தேங்காய்கள், லாரிகள் மூலம் மும்பை, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இப்பணியில், ப.வேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் செயல்படுகின்றன. இத்தொழில் மூலம், 1,000க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 5,000க்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
கடந்த மாதம், மும்பை மார்க்கெட்டில் ஒரு தேங்காய் ஏழு ரூபாய்க்கு விற்பனையானது. இது, தற்போது ஐந்து ரூபாய்க்கு விலை போகிறது. நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய காய், தற்போது மூன்று ரூபாய்க்கு விற்பனையாகிறது. லாரியில், நாளொன்றுக்கு 40 ஆயிரம் காய்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மும்பை மார்க்கெட்டில், கடந்த ஆண்டு ஒரு லோடு தேங்காய், 2.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாது. தற்போது விலை குறைந்து, 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் தேங்காய்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், தமிழக தேங்காய்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே சமயம் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|