பதிவு செய்த நாள்
25 மார்2012
00:17
ஐதரபாத்:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் முதல் ஆண்டு பிரிமிய வருவாயாக, 90 ஆயிரத்து 16 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 13 சதவீதம் (1 லட்சத்து 3 ஆயிரத்து 878 கோடி ரூபாய்) குறைவாகும் என, காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனம்:நாட்டில் பொதுத்துறையில், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.) நிறுவனமும், தனியார் துறையில், 23 நிறுவனங்களும் ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. மதிப்பீட்டு காலத்தில், தனியார் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், அதிகபட்சமாக, 17.7 சதவீதம் குறைந்துள்ளது. எல்.ஐ.சி.நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 11.3 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதியம் மற்றும் பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்களை, அதிக அளவில் அறிமுகம் செய்யாத காரணத்தால் தான், அவற்றின் பிரிமிய வருவாயில், சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த 2000ம் ஆண்டில் காப்பீட்டு வணிகத்தில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.மேலும், 26 சதவீத பங்கு மூலதனத்துடன் அன்னிய நிதி நிறுவனங்களும் இந்திய காப்பீட்டு வணிகத்தில் இறங்கும் வகையில் நடவடிக்கை @மற்கொள்ளப்பட்டது.
பொது காப்பீடு:உள்நாட்டில், பொதுகாப்பீட்டு வணிகத்தில், மொத்தம் 24 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் பொதுத் துறையில் நான்கு நிறுவனங்களும், தனியார் துறையில் 20 நிறுவனங்களும் உள்ளன.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், மொத்த பிரிமிய வருவாயாக, 52 ஆயிரத்து 104 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்டதை விட, 24 சதவீதம் (42 ஆயிரத்து 11 கோடி ரூபாய்) அதிகமாகும்.
கணக்கீட்டு காலத்தில், தனியார் துறையைச் சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 26.2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 17 ஆயிரத்து 341 கோடியிலிருந்து, 21 ஆயிரத்து 885 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 22.5 சதவீதம் வளர்ச்சியடைந்து, 24 ஆயிரத்து 670 கோடியிலிருந்து, 30 ஆயிரத்து 219 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, இரிடா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|