பதிவு செய்த நாள்
25 மார்2012
23:55
சேலம்:ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதால், இட்லி அரிசி விலை உயரும் என, தமிழக நெல் அரிசி வணிக சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலத் துணைத் தலைவர் சியாமளநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட ரயில்வே நிதி நிலை அறிக்கைக்கு முன்பாகவே, நெல், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவு தானியங்களுக்கு, ரயில்வே போக்குவரத்து கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது.
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டில், சென்னை, விருதுநகர், சேலம் டவுன் ரயில்வே மார்க்கெட்டுக்கு ஆண்டு முழுவதும் நெல், அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வருகின்றன.சட்டீஸ்கர் மாநிலம் டாபா என்னுமிடத்தில் இருந்து, சேலம் மார்க்கெட்டுக்கு, ஆண்டு முழுவதும் கிராந்தி என்னும் இட்லி அரிசிக்கான நெல் வந்து கொண்டு இருக்கிறது. டாபாவிலிருந்து சேலம் வருவதற்கு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 198 முதல் 200 ரூபாய் வரை வேகன் வாடகை செலுத்தி வந்தோம்.
தற்போது அறிவித்துள்ள கட்டண உயர்வால், குவிண்டாலுக்கு 262 முதல் 265 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இட்லி அரிசி விலை கிலோவுக்கு, 1.40 ரூபாய் வரை உயரும். ஏற்கன@வ பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகி வரும் அரிசி ஆலை தொழில், ரயில்வே துறை அறிவிப்பால், மேலும் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டுக்கு முன், இட்லி அரிசி குவிண்டால், 2,600 ரூபாய்க்கு விற்றது, தற்போது 2,750 ரூபாய்க்கு விற்கிறது. சில்லரையில் கிலோ 30 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தள்ளது.டாபாவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பயண தூரம், 2,114 கி.மீ.,. ரயில் வேகன்களுக்கு, 25 கி.மீ., வரை ஒரு வாடகையும், 25 கி.மீ., முதல் 50 கி.மீ.,வரை கூடுதல் வாடகையும் நிர்ணயிக்கப்படுகிறது.
இனி, 1,500 கி.மீ., முதல், 1,750 கி.மீ., என்ற ஒரு நிலையும், 1,750 கி.மீ., முதல், 2,000 கி.மீ., வரையும், 2,000 கி.மீ., முதல் 2,500 கி.மீ., தூரம் வரை ஒரு நிலையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், சேலம், சென்னை, விருதுநகர், கோவை போன்ற இடங்களுக்கு வரும் சரக்குகளுக்கு, 2,100 கி.மீ., தூரத்துக்கு செலுத்த வேண்டிய வாடகைக்கு பதில், 2,500 கி.மீ., தூரத்துக்கான வாடகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாபாவில் இருந்து சேலத்துக்கு வசூலிக்கும் வாடகை தான், கன்னியாகுமரி வரை வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். உணவு தானியங்களை, "130 ஏ கிளாஸ்' என்ற நிலைக்கு திரும்பவும் கொண்டு வர மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|