பதிவு செய்த நாள்
27 மார்2012
00:42
நடப்பு 2011-12ம் நிதியாண்டில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, 16 ஆயிரத்து 767 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்கியுள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் இயக்குனர் குழுவின் ஒப்புதலின்படி, பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவது வழக்கம்.
17 நிறுவனங்கள் : இதன்படி, நடப்பு நிதியாண்டில் 17 பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு வழங்கியுள்ள இடைக்கால டிவிடெண்ட், முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் வழங்கப்பட்டதை விட 36.8 சதவீதம் (12 ஆயிரத்து 254 கோடி ரூபாய்) அதிகமாகும்.
சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 26 ஆயிரத்து 57 கோடி ரூபாய் டிவிடெண்ட் வழங்கின. மத்திய அரசு, நடப்பு 2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகளில் 5-10 சதவீதத்தை விற்பனை செய்து 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது.
ஆனால் பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால் 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்தது. இதையடுத்து, பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., ஏல முறையில் பங்கு விற்பனையை மேற்கொண்டது. இதில் 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு, வரும் 2012-13ம் நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
நிதி பற்றாக்குறை : நடப்பு நிதியாண்டில் பங்கு விற்பனை வாயிலான, வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போனதாலும், தொழில் வளர்ச்சியின் மந்தநிலையால் வரி வருவாய் குறைந்ததாலும், மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மதிப்பிட்டை விட அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கும் பொருட்டு, லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், அதிக அளவில் டிவிடெண்ட் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், சாதனை அளவாக 95 சதவீத இடைக்கால டிவிடெண்டை வழங்கியுள்ளது. இதன்படி, இந்நிறுவனத்தின் 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு 9.50 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் வழங்கப்பட்டது. அந்தவகையில், இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கு, இடைக்கால டிவிடெண்டாக மத்திய அரசுக்கு 5,400 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில் ஆயிரத்து 990 கோடி ரூபாயாக இருந்தது.
சென்ற முழு நிதியாண்டிற்கு இந்நிறுவனம் மத்திய அரசுக்கு 2,217 கோடி ரூபாய் டிவிடெண்ட் வழங்கியுள்ளது. 2009-10 மற்றும் 2008-09ம் நிதியாண்டுகளில் மத்திய அரசுக்கு, இந்நிறுவனம் முறையே 2,210 கோடி ரூபாய் மற்றும் 1,708 கோடி ரூபாய் டிவிடெண்ட் வழங்கியுள்ளது.
ஓ.என்.ஜி.சி., : ஓ.என்.ஜி.சி நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கு 30 சதவீத இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் வழங்கியுள்ளது. ஏற்கனவே இந்நிறு வனம், சென்ற ஜனவரியில் அதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு முதல் தவணையாக 125 சதவீத இடைக்கால டிவிடெண்ட் வழங்கியது. தற்போதைய நிலவரப்படி இந்நிறுவனம் 155 சதவீத இடைக்கால டிவிடெண்ட் வழங்கியுள்ளது. இதையடுத்து, 5 ரூபாய் முகமதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு 7.75 ரூபாய் இடைக்கால டிவி டெண்டாக வழங்கப்பட்டது. அந்தவகையில், இந்நிறுவனம் மத்திய அரசுக்கு இதுவரை 4,853 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 5,074 கோடி ரூபாயாக இருந்தது.
என்.டி.பி.சி., : அதே சமயம், இதே காலத்தில் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்.டி.பி.சி) நிறுவனம், வழங்கிய இடைக்கால டிவிடெண்ட் 2,090 கோடியில் இருந்து, 2,439 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. என்.எம்.டீ.சி நிறுவனம் மத்திய அரசுக்கு வழங்கிய இடைக்கால டிவிடெண்ட் 410 கோடியிலிருந்து, 714 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அது போன்று ஆயில் இந்தியா நிறுவனம் 660 கோடி ரூபாய் (339 கோடி ரூபாய்), பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 487 கோடி ரூபாய் (341 கோடி ரூபாய்), பெல் நிறுவனம் 451 கோடி ரூபாய் (439 கோடி ரூபாய்), செயில் நிறுவனம் 425 கோடி ரூபாய் (425 கோடி ரூபாய்) வழங்கியுள்ளன. இவை தவிர மத்திய அரசுக்கு, ஆர்.ஈ.சி நிறுவனம் 230 கோடி ரூபாய் (231 கோடி ரூபாய்) மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் 257 கோடி ரூபாய் (161 கோடி ரூபாய்) ஆகியவையும் இடைக்கால டிவிடெண்ட் வழங்கியுள்ளன.
நடப்பு வாரத்துடன், நடப்பு நிதியாண்டு முடியவடைய உள்ள நிலையில், வரும் மாதத்தில், பல பொதுத்துறை நிறுவனங்கள் இறுதி டிவிடெண்ட் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|