பதிவு செய்த நாள்
27 மார்2012
11:09
சென்னை: குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீடுகள் கட்ட, தளப்பரப்பு குறியீடு (எப்.எஸ்.ஐ.,) அதிகரிக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்: குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், அங்கு வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டுவதற்கும் இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது, 535 கோடி ரூபாய் செலவில், 19,083 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 13வது நிதிக்குழு மானியம், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., ஆகியவற்றின் நிதி ஆதாரங்களை, 2012-13ம் நிதி ஆண்டில், 817.5 கோடி ரூபாய் செலவில் 18,234 கூடுதல் குடியிருப்புகள் கட்டப்படும்.
புதிய சலுகை: நிலங்களின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடுகள் வாங்குவது எட்டாக்கனியாகவே உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடுதல் கட்டணம் எதுவுமின்றி, குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்டுவதற்கான தளப்பரப்பு குறியீடு (எப்.எஸ்.ஐ.,) அதிகரிக்கப்படும். இதனால், இத்தகைய பிரிவினருக்கான வீடுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.
கடன் தள்ளுபடியில்...: வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கங்களில் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு, அவர்களின் கடன் சுமையைக் குறைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதை நிறைவேற்றும் வகையில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வட்டி தள்ளுபடியை, 50லிருந்து 75 சதவீதமாகவும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வட்டி தள்ளுபடியை, 25லிருந்து 50 சதவீதமாகவும், உயர் வருவாய் பிரிவினருக்கான வட்டி தள்ளுபடியை, 10லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தி புதிய வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும். வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை, நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், 1.14 லட்சம் பேர் பயன் பெறுவர். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், 665 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை கடன்களை வசூலிக்க இத்திட்டம் உதவும். வட்டி இழப்புக்கான நிதியுதவியாக அரசுக்கு 390 கோடி ரூபாயும், அபராத வட்டித் தள்ளுபடியால் கூட்டுறவு சங்கங்களுக்கு, 545 கோடி ரூபாயும் இழப்பு ஏற்படும். இவ்வாறு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|