பதிவு செய்த நாள்
27 மார்2012
13:39
பஞ்சாப் மாநிலம் லுதியானா, சைக்கிள் உற்பத்திக்கு பெயர் போனது. இந்தியாவில் உற்பத்தியாகும் சைக்கிள்களில் 90 சதவீதம் இங்கிருந்து தான் கிடைக்கின்றன. ஹீரோ சைக்கிள்ஸ், அவான் சைக்கிள்ஸ், ஹை -பேர்டு போன்ற பிரபல சைக்கிள் நிறுவனங்கள் இங்கு தான் செயல்படுகின்றன.ஆனால், சீனாவில் இருந்து சைக்கிள் இறக்குமதி செய்யப்படுவது, லுதியானா சைக்கிள் நிறுவனங்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து கடந்த 2008-09ம் ஆண்டில் ரூ.300 கோடிக்கு சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இது கடந்த நிதியாண்டில், ரூ.1600 கோடி என அதிகரித்து விட்டது. இத்துடன், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சைக்கிள்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இப்படி இரண்டு வகையிலும் பாதிக்கப்பட்ட சைக்கிள் உற்பத்தியாளர்கள், சீனா சைக்கிள்கள் இறக்குமதியை தடுக்க, பொருள் குவிப்பு தடுப்பு வரியை சுமத்த வேண்டும் என்று மத்திய அரசை கோரி வந்தன. ஆனால், சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட பொது பட்ஜெட்டில், உள்நாட்டு சைக்கிகள் உற்பத்தியை பாதிக்கும் அளவுக்கு அறிவிப்புகள் காணப்படுகின்றன.
பொதுவான கலால் வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர சைக்கிள்கள் மீதான கலால் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சேவை வரியும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரச்னை இத்துடன் முடியவில்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்கள் மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், சைக்கிள் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இப்படி பலவகையிலும், சைக்கிள்கள் மீது, தனித்தனியாக வரி பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் சைக்கிள்களுக்கு தேவையான உதிரி பாகங்களில் பெரும்பாலானவை, சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், உதிரி பாகங்கள் மீதான வரியை 10 சதவீதம் உயர்த்தி இருப்பது, சைக்கிள் உற்பத்தியாளர்களை பெரிதும் கவலையடைய செய்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் சைக்கிள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு மட்டுமே, சீன சைக்கிள்களை தடுக்கும். அவர்கள் மாற்று வழியை கடைப்பிடிப்பாளர்கள் என்றும் சைக்கிள் உற்பத்தியாளர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, சைக்கிள் என்பது ஏழைகளின் வாகனம். இந்த வரி உயர்வு, சைக்கிள் விலை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தி விடும் என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|