பதிவு செய்த நாள்
28 மார்2012
00:03
துடில்லி: மக்களின் வாழ்க்கை முறை படிப்படியாக மாறி வருகிறது. 2001ம் ஆண்டிற்கும் 2011ம் ஆண்டிற்கும் இடையிலான 10 ஆண்டுகளில், இந்திய மக்களின் வாழ்க்கை முறை மாறியுள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2001ல், இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை, 17.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, 2011ல், 28.6 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது. இருப்பினும், சமையல் எரிவாயு பயன்பாடு என்பது நகர்புறங்களில் மிகவும் அதிகரித்துள்ளது.ஆனால், கிராமப்புறங்களில் இன்றும் விறகே முக்கிய எரிபொருளாக உள்ளது. 2001ல், இந்திய வீடுகளில் விறகை எரிபொருளாக பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 52.5 சதவீதமாக இருந்தது. இது, 2011ல், 49 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலத்தில், தாவரக் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திலிருந்து, 8.9 சதவீதமாகவும், சாண வரட்டியை எரிபொருளாக பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை, 9.8 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது. மண்ணெண்ணெயை பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 6.5 சதவீதத்திலிருந்து, 2.9 சதவீதமாகவும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியை எரிபொருளாக உபயோகிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, 2 சதவீதத்திலிருந்து, 1.5 சதவீதமாகவும் குறைந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், இந்தியாவில், சொந்த வீடு வைத்திருப்போர் எண்ணிக்கை மாற்றமின்றி உள்ளது. கிராமப்புறங்களில், பெரும்பாலானோர் சொந்த வீடுகளிலேயே வசிக்கின்றனர். ஆனால், இவர்கள் வசிக்கும் வீட்டின் அளவு பெரும்பாலும் ஓர் அறை கொண்டதாகவே உள்ளது. 2001ல், உள்நாட்டில் சொந்த வீடு வைத்திருப்போர் எண்ணிக்கை, 86.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இந்த எண்ணிக்கை 2011ம் ஆண்டிலும் அதே அளவில் தான் (86.6 சதவீதம்) உள்ளது.இதே காலத்தில், தொலைபேசி பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை, 9.1 சதவீதத்திலிருந்து, 63.2 சதவீதமாக மிகவும் அதிகரித்துள்ளது."டி.வி' வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, 31.6 சதவீதத்திலிருந்து, 47.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், வானொலி பெட்டிகள் பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 35.1 சதவீதத்திலிருந்து, 19.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது.ஒட்டுமொத்த இந்திய குடும்பங்களில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை சொந்தமாக வாங்குவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. நகர்புறங்களில், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதத்தினர், கார் உள்ளிட்ட வாகனங்களை சொந்தமாக கொண்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இந்த எண்ணிக்கை 5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. கணக்கீட்டு காலத்தில், கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வைத்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2.5 சதவீதத்திலிருந்து, 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|