பதிவு செய்த நாள்
28 மார்2012
00:04
- பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலத்தில், வங்கிகள் வழங்கிய மொத்த கடனில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ), வழங்கிய கடன் 15.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 13.4 சதவீதம் என்றளவில் இருந்தது.இதே காலத்தில், இந்நிறுவனங்களுக்கு, வங்கிகளால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள கடன் தொகை 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வங்கிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான கால வரையறை மற்றும் அதன் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, வங்கிகள் வழங்கும் கடன் அளவு, ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற அளவிலும், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் அளவு 10 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.இந்திய அளவிலான நான்காவது கணக்கெடுப்பின்படி, கடந்த 2006-07ல், நாட்டில் இயங்கி வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2.61 கோடியாக உள்ளது. இதில், பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 5.94 சதவீதம் என்ற அளவில் உள்ளது.கடந்த 2004-05ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி), இந்நிறுவனங்களின் பங்களிப்பு 5.84 சதவீதமாக இருந்தது. மேலும் இது, 2005-06ம் நிதியாண்டில், 7.20 சதவீதமாகவும், 2006-07ம் நிதியாண்டில் 8 சதவீதமாகவும், 2007-08ம் நிதியாண்டில் 8.72 சதவீதமாகவும் வளர்ச்சி கண்டுள்ளது என, தேசிய புள்ளியல் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தவிர, கடந்த 2006-07ல், பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாயிலாக, 93 லட்சத்து 9,000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு பெறாத நிறுவனங்கள் வாயிலாக வேலை வாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை 5.03 கோடியாக உள்ளது என, கணக்கெடுப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் பொருளாதார ஆய்வறிக்கையில், ஒருங்கிணைக்கப்பட்ட துறைகளின் வாயிலாக வேலை வாய்ப்பு பெற்றோர், 2007ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலுமாக, 2 கோடியே 72 லட்சத்து 76 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின் சலுகைகள் மற்றும் நிதியுதவிகள் பெறுவதற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக உள்ளது. இருப்பினும், பதிவு பெறாமல் இயங்கும் இவ்வகை நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|