பதிவு செய்த நாள்
29 மார்2012
02:32
புதுடில்லி : மத்திய அரசு, வரும் 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 3 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இது, வரும் நிதியாண்டில், மத்திய அரசு வாங்க திட்டமிட்டுள்ள கடனில் 65 சதவீதமாகும்.
மத்திய அரசின் 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 90 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்படும் பட்சத்தில், கடன் தொகை 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி உயரதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில், மத்திய அரசு வாங்க உள்ள கடன் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மதிப்பீட்டு காலத்தில், மத்திய அரசின் நிகர கடன் 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிகர கடன் தொகையில் 60 சதவீதமாகும்.
இந்நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, அதிக அளவில் முதலீடு குவிந்து, வருவாய் அதிகரிக்கும் என்று மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் ஆர்.கோபாலன் தெரிவித்துள்ளார். இது போன்ற காரணங்களால், பட்ஜெட்டில் மதிப்பிட்டதை விட, குறைவான அளவிற்கே அரசு கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|