பதிவு செய்த நாள்
30 மார்2012
00:09
புதுடில்லி:சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி, 6.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில், 6.4 சதவீதம் என்றளவில் இருந்தது என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 0.5 சதவீதமாக குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் தொழில் துறையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை முக்கிய எட்டு துறைகளாக விளங்குகின்றன.
சென்ற பிப்ரவரி மாதத்தில், மின்சாரம், நிலக்கரி, சிமென்ட் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி முறையே, 8 சதவீதம், 17.8 சதவீதம் மற்றும் 10.8 சதவீதம் என்றவில் வளர்ச்சி கண்டுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் முறையே, 7.2 சதவீதம், மைனஸ் 5.8 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் என்றளவில் இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 12.2 சதவீதத்திலிருந்து, 0.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதத்திலிருந்து, 6.2 சதவீதம் என்றளவில் அதிகரித்துள்ளது.இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ் 7.6 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. உரம் மற்றும் உருக்கு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி முறையே, 4.8 சதவீதம் மற்றும் 18.5 சதவீதம் என்றளவிலிருந்து, 4.1 சதவீதம் மற்றும் 4.3 சதவீதம் என குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி, 4.4 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 5.8 சதவீதம் என்றளவில் சற்று உயர்ந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|