பதிவு செய்த நாள்
02 ஏப்2012
00:12
சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) சாதனை அளவாக, 6,600 கி.மீ., சாலைகள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளன.இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு நாளில், 20 கி.மீ., தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க வேண்டும் என்ற இலக்கை ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதன்படி ஓராண்டில், 7,000 கி.மீ., நெடுஞ்சாலைகள் போட வேண்டியுள்ளது. எனினும், சாதனை அளவாக, சென்ற நிதியாண்டில் 6,600 கி.மீ., தூரம் நெடுஞ்சாலைகள் போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, சாலை போக்குவரத்து அமைச்சகம், என்.எச்.ஏ.ஐ., வாயிலாக, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 250 கி.மீ., தூரம் சாலைகள் போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்ற நிதியாண்டில், 6,600 கி.மீ., தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 2,100 கி.மீ., தூரத்திலான சாலைப் பணிகள் மட்டுமே முடிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2005-06ம் ஆண்டு, என்.எச்.ஏ.ஐ., 4,740 கி.மீ., தூரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கியது. இதில் அவ்வாண்டு, 753 கி.மீ., தூர நெடுஞ்சாலைப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டன.இதே போன்று, 2006-07ம் நிதியாண்டில் அனுமதி வழங்கப்பட்ட 1,734 கி.மீ., நெடுஞ்சாலைத் திட்டங்களில், 635 கி.மீ., அளவிற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டன.
2007-08ம் நிதியாண்டில் அனுமதி அளித்த 1,234 கி.மீ., திட்டங்களில், 1,682 கி.மீ., திட்டங்கள் முடிக்கப்பட்டன. 2008-09ம் நிதியாண்டில் 663 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த நிதியாண்டில், 2,205 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் போடப்பட்டன. 2009-10ம் நிதியாண்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட, 3,368 கி.மீ., தூரத்திற்கான சாலைப் பணிகளில், 2,738 கி.மீ., வரையிலான பணிகள் முடிக்கப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலைத் துறை, அதிக அளவில் சாலைப் பணிகளுக்கு அனுமதி வழங்கினாலும், சாலைகளின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என இத்துறையினர் தெரிவித்தனர்.'சாலைப் பணிகளை விரைந்து முடிக்க, அதிக அளவிலான நிதி ஒதுக்க வேண்டும். இதற்கு, சாலைகள் துறையில், ஓய்வூதிய நிதியம் போன்ற அமைப்புகள் முதலீடு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இது தவிர, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்' என தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் எம்.முரளி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி முதன் முறையாக அமைந்தபோது, ஒரு நாளில் சராசரியாக, 4.1 கி.மீ., தூரம் தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது. இது, இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்தபோது, 7 கி.மீ., தூரமாக அதிகரித்தது. தற்போது ஒரு நாளைக்கு, 20 கி.மீ., தூரம் சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் சாலைப் போக்குவரத்து அமைச்சராக கமல்நாத் பொறுப்பேற்ற பிறகு, அதிக அளவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அவர், 20 ஆயிரம் கி.மீ., தூரம் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக, 200 திட்டங்களுக்கு அனுமதி வழங்கினார்.சென்ற நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், 30 திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|