பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:05
மும்பை: கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் மூலம், 5,800 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், திரட்டப்பட்ட தொகையை விட, 82 சதவீதம் (33 ஆயிரத்து 183 கோடி ரூபாய்) குறைவாகும் என, மும்பை பங்கு சந்தை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களம் இறங்க பல நிறுவனங்கள் தயக்கம் காட்டின. இதனால் தான், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட தொகை மிகவும் சரிவடைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், 33 இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. அதேசமயம், முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 52 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. கடந்த நிதியாண்டில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட முக்கிய நிறுவனங்களுள், பொதுத் துறையைச் சேர்ந்த நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (என்.பீ.சி.சி.), புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 120 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.மேலும், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம், 1,245 கோடி ரூபாயையும், முத்தூட் பைனான்ஸ், 900 கோடி ரூபாயும் திரட்டிக் கொண்டன. இவைதவிர, பியூச்சர் வென்ச்சர்ஸ் இந்தியா, 750 கோடி ரூபாயையும், முன்பேர வர்த்தக சந்தை நிறுவனமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்), 663 கோடி ரூபாயையும் திரட்டி கொண்டன.இவை தவிர, பவர் பைனான்ஸ் கார்ப்பஷேன் மற்றும் ஓ.என்.ஜி.சி., ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது பங்கு வெளியீட்டின் வாயிலாக முறையே, 4,660 கோடி ரூபாய் மற்றும் 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|