பதிவு செய்த நாள்
11 ஏப்2012
16:04
சாலைகளில் வேகமாக செல்லும் காரை போல, வானத்தில் பறக்கும் கார் என்பது அமெரிக்க மக்களின் நீண்ட நாள் கனவு. இதற்கான முயற்சி, கடந்த, 1930ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. எனினும், தற்போது தான் அந்த கனவு நனவாகியுள்ளது. அமெரிக்காவின் மாசாசூட்ஸ் மாகாணத்தில் உள்ள வுபர்ன் என்ற நகரில் செயல்படும் டிராஃபுகியா என்ற நிறுவனம், பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளது. சமீபத்தில் இதற்கான சோதனை ஓட்டமும், வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. இந்த பறக்கும் கார், 1,400 அடி உயரத்தில், எட்டு நிமிடங்கள் பறந்துள்ளது. பயணிகள் விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவை.
டிராஃபுகியா நிறுவனம், இந்த பறக்கும் காரில் பல முக்கிய அம்சங்களை இணைத்துள்ளது. இந்த காரில், இரண்டு சீட்கள் மட்டுமே உண்டு. சாலையில் செல்வதற்கு ஏதுவாக, நான்கு சக்கரங்களும், வானில் பறப்பதற்கு ஏதுவாக, இரண்டு இறக்கைகளும் இதில் உண்டு. சாலையில் செல்லும் போது, இந்த இறக்கைகள் தானாக மடிந்து கொள்ளும் திறன் படைத்தது. இந்த காரின் எடையை குறைக்கும் வகையில், விசேஷ டயர்கள் மற்றும் எடை குறைந்த கண்ணாடி ஆகியவற்றை பொருத்த, அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கார், சாலையில் ஒரு மணி நேரத்தில் 70 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. வானத்தில் பறக்கும் போது, 115 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த பறக்கும் காரில், 85 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுளளது. வானத்தில் பறக்கும் போது, ஒரு மணி நேரத்துக்கு 20 லிட்டரும், சாலையில் செல்லும் போது 35 கி.மீ., தூரம் செல்ல நான்கு லிட்டரும் செலவாகும். இந்த காரின் விலை ரூ.1.40 கோடி. அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த காரில் பயணம் செய்ய, குறைந்தபட்சம் 20 மணி நேரம் பைலட் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|