பதிவு செய்த நாள்
16 ஏப்2012
23:48
- வீ.அரிகரசுதன் -சென்னை, ஒரகடத்தில் அமைந்துள்ள டைம்லர் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் தொழிற்சாலையை, முதல்வர் ஜெயலலிதா நாளை, திறந்து வைக்கிறார்.ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் குழுமம், புகழ் பெற்ற, "பென்ஸ்' கார்களையும், வர்த்தக வாகனங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ குழுமத்துடன் இணைந்து, சென்னை அருகே ஓரகடத்தில், வர்த்தக வாகன தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க, கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. பின், ஹீரோ குழுமம் பிரிந்து சென்று விட்டது.ஆண்டுக்கு, 80 ஆயிரம் இலகு மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலையில், முதல் கட்டமாக, 30 ஆயிரம் வாகனங்கள் தயாரிக்கப்படும் என தெரிகிறது. இங்கு தயாரிக்கப்படும் வர்த்தக வாகனங்கள் அனைத்தும்,"பாரத் பென்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.டைம்லர் தொழிற்சாலையில், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படும் வர்த்தக வாகனங்கள் அனைத்தும், உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்பட உள்ளன. சில ஆண்டுகளுக்கு பிறகு, ஐரோப்பா உள்ளிட்ட இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரகடத்தில், 400 ஏக்கர் பரப்பில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் இத்தொழிற்சாலையின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதை முதல்வர் ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "டைம்லர் நிறுவனம், முதலில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டிற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இது, தற்போது, 4,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் பணியாளர் எண் ணிக்கை, 300 ஆக உள்ளது. இது விரைவில், 2,000ஐ தாண்டும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|