பதிவு செய்த நாள்
26 ஏப்2012
00:17
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இந்நிலையில், சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி), இந்தியாவின் தரக் குறியீட்டை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.
அதேசமயம், மற்றொரு சர்வதேச நிறுவனமான மூடிஸ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்கு உள்ளது என்றாலும், அரசியல் குறுக்கீடுகளால் முன்னேற்றத்தில் தடை ஏற்படக்கூடும் என அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, மதியத்திற்கு பிறகு, சரிவு நிலை ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. ஆனால், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, மின்சாரம், ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 56 புள்ளிகள் சரிவடைந்து, 17,151.29 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,249.61 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,019.24 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 20.65 புள்ளிகள் குறைந்து, 5,202 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,236.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,160.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|