பதிவு செய்த நாள்
26 ஏப்2012
00:20
புதுடில்லி:நடப்பாண்டு மார்ச் மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 2.9 சதவீதம் குறைந்து, 32 லட்சம் டன்னாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி, 10.1 சதவீதம் குறைந்து, 385 கோடி கன மீட்டராகவும் சரிவடைந்துள்ளது என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால், இவை, ஈராக், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த இறக்குமதி செலவினத்தில், இவற்றின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
பங்களிப்பு:இந்தியா, நாளொன்றுக்கு, 24 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குதி செய்கிறது. இதில், உள்நாட்டு விநியோகத்திற்கான பங்களிப்பு, 7.50 லட்சம் பீப்பாய் என்றளவில் உள்ளது. இதேபோல், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, நாளொன்றுக்கு, 11.50 கோடி கன மீட்டராக உள்ளது. ஆனால், உள்நாட்டில் இதற்கான தேவை, 16.50 கோடி கன மீட்டராக உள்ளது. உற்பத்தியை விட, தேவை அதிகமாக இருப்பதால், நிலவும் பற்றாக்குறையை சமாளிக்க, இயற்கை எரிவாயு அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இயற்கை எரிவாயு:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, 385 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 10.1 சதவீதம் (428 கோடி கன மீட்டர்) குறைவாகும். இதையடுத்து, இதன் உற்பத்தி, தொடர்ந்து, 16 மாதங்களாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில், இயற்கை எரிவாயு உற்பத்தியில், முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனம், கிருஷ்ணா -கோதாவரி படுகையில், "டீ6' எண்ணெய் வயலில், இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு, எரிவாயு உற்பத்தி குறைந்ததை அடுத்து, மார்ச் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில், இதன் உற்பத்தி குறைந்துள்ளது.
சென்ற நிதியாண்டில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 4,755 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 5,222 கோடி கன மீட்டராக உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்: சென்ற மார்ச் மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 32 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 2.9 சதவீதம் (33 லட்சம் டன்) குறைவாகும். இது, இதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில், சற்று உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு மாதத்தில், அசாம் மாநிலத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 100 சதவீதமும், மும்பையில் உள்ள, பொதுத் துறையைச் சேர்ந்த ஒ.என்.ஜி.சி.நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 4.7 சதவீதமும் குறைந்துள்ளது. இதனால் தான், மார்ச் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 3.89 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், 3.77 கோடி டன்னாக இருந்தது என, பெட்ரோலிய அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில், பொதுத் துறை நிறுவனங்களின், 17 சுத்திகரிப்பு ஆலைகளும், தனியார் துறை நிறுவனங்களின் இரண்டு சுத்திகரிப்பு ஆலைகளும் செயல்படுகின்றன. சென்ற மார்ச் மாதத்தில், இவ்வாலைகள், மொத்தத்தில், 1.52 கோடி டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை உற்பத்தி செய்துள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1.6 அதிகமாகும்.இதே மாதங்களில், குஜராத் ஜாம்நகரில் செயல்படும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தி, 6.6 சதவீதமும், எஸ்ஸார் நிறுவனத்தின், வாடிநார் சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தி, 10.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல்சென்ற மார்ச் மாதத்தில், பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு, 5.1 சதவீதம் உயர்ந்து, 1.35 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. டீசல் விற்பனை, 10.3 சதவீதமும், பெட்ரோல் பயன்பாடு, 11.5 சதவீதமும், நாப்தா மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாடு, 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|