பதிவு செய்த நாள்
27 ஏப்2012
00:12
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஊக்கு விப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று
அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைவர் பென் பெர்னகி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அமெரிக்கா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இருப்பினும், இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில்
எதிரொலிக்கவில்லை. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கமாகவே இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மின்சாரம், ரியல் எஸ்டேட்,
மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இருப்பினும், கோல் இந்தியா, ஜிந்தால் ஸ்டீல், ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக
விலைக்கு கைமாறின. தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. குறிப்பாக, டி.சி.எஸ்., இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும்,
விப்ரோ, எச்.சி.எல்., நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 20.62 புள்ளிகள் சரிவடைந்து, 17,130.67
புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,193.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,084.05 புள்ளிகள்
வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய
பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 13 புள்ளிகள் குறைந்து, 5,189 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,215.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக
5,179.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|