பதிவு செய்த நாள்
29 ஏப்2012
00:22
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் உற்பத்தியாகும், 8,000 டன் மக்காச்சோளம், பிஸ்கட், மாவு உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் தயாரிக்க வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம்: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும், 3,000 ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர். மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், மருதனப்பள்ளி, கிறிஸ்துபாளையம், தளி, தேன்கனிக் கோட்டை பகுதியில் அதிகளவு சாகுபடி நடக்கிறது.
சாகுபடி செய்த, 90 நாளில் அறுவடை செய்யலாம் என்பதால், குறுகிய காலத்தில் வருமானத்தை குறி வைத்து விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வ மடைந்துள்ளனர்.ஓசூர் தாலுகாவில் உற்பத்தியாகும் மக்காச்சோளம், வடமாநிலங்களுக்கு பிஸ்கட், மாவு உணவு பொருட்கள் தயாரிக்கவும், நாமக்கல், கோவை மாவட்டங்களில் கறிக்கோழி தீவனத்திற்காக கோழிப் பண்ணைகளுக்கும் அனுப்பப்படுகிறது.
மக்காச்சோளம், எண்ணெய் தயாரிப்பதற்கும், கோழிப்பண்ணைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவதால், ஆண்டு முழுவதும் நிலையான விலை கிடைக்கிறது. ஏக்கருக்கு 4 டன் மகசூல் கிடைக்கிறது.தற்போது, மக்காசோளம் சாகுபடியில் ஹைபீரிட் விதைகள் வந்துள்ளதால், அவற்றை வேளாண் துறையின் புதிய தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்வதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
மாவு பொருட்கள்:இதுகுறித்து, ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் நாகராஜ் கூறியதாவது:கடந்த காலத்தில் மக்காச்சோளம் கதிர் சாப்பிட மட்டும் பயன்படுத்தினர். தற்போது அவற்றில் இருந்து பல்வேறு வகை மாவு பொருட்கள், பிஸ்கட், எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. கோழிகளுக்கு உணவு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
அறுவடை செய்தபின், மீதமாகும் சோள தட்டை மாட்டுக்கு தீவனமாக போடப்படுகிறது. விறகாகவும் பயன்படுத்தலாம். இவ்வாறு பல்வேறு வகை பயன்பாட்டிற்கு மக்காச்சோளம் பயன்படுவதால், விவசாயிகளுக்கு நிறைவான வருவாய் கிடைக்கிறது.மானவாரியில் மட்டும் மாவட்டத்தில், 1,800 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒற்றை கதிர் மற்றும் இரட்டை கதிர் மகசூல் வழங்கக்கூடிய வீரிய ரக விதைகள் சந்தைக்கு வந்துள்ளன. வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. விதைப்பிற்கு ஏக்கருக்கு, 6 கிலோ விதைகள் தேவைப்படுகிறது.
சாகுபடி செலவு:ஒரு கிலோ விதை தற்போது, 30 ரூபாய் முதல் ரகத்தை பொறுத்து, 100 ரூபாய் வரையுள்ளது. சாகுபடி செய்ய ஏக்கருக்கு, 4,000 முதல் 5,000 ரூபாய் செலவாகிறது. ஏக்கருக்கு, 4 டன் மகசூல் கிடைக்கிறது. ஒரு டன், 8,000 ரூபாய் வீதம், ஏக்கருக்கு, 32 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சாகுபடி மற்றும் பராமரிப்பு செலவு போக, 25 ஆயிரம் ரூபாய் 90 நாளில் லாபம் கிடைக்கிறது. மாவட்டத்தில் ஆண்டு தோறும் மொத்தம் 8,000 டன் மக்காசோளம் உற்பத்தியாகிறது. தற்போது ஆண்டுதோறும் சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருவதால், நடப்பாண்டு மேலும் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|