பதிவு செய்த நாள்
29 ஏப்2012
00:25
நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), ஏப்ரல் மாதம் 22ம் தேதி வரை, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.49 கோடி டன்னை தாண்டியுள்ளது. இது, சென்ற 2010-11ம் சர்க்கரை பருவத்தின் இதே காலத்தில், 2.21 கோடி டன்னாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில் சர்க்கரை உற்பத்தி 13 சதவீதம் உயர்ந்துள்ளது.
மதிப்பீடு:நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2.60 கோடி டன்னை எட்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது, இந்தியாவின் ஓராண்டிற்கான சர்க்கரை தேவையை (2.20 கோடி டன்) விட அதிகமாகும். அக்டோபர் முதல் நடப்பு ஏப்ரல் 22ம் தேதி வரை, மகாராஷ்ட்ரா மாநிலம் 87.1 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது.
இது, கடந்த பருவத்தின் இதே காலத்தை விட, 8.5 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில், உத்தரபிரதேசத்தின் சர்க்கரை உற்பத்தி, 18 சதவீதம் அதிகரித்து, 69.4 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி,முறையே 37.5 லட்சம் டன் மற்றும் 15.2 லட்சம் டன்னாக உள்ளது.
சர்க்கரை கழகம்:நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், வரும் சர்க்கரை பருவத்தில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 5 சதவீதம் குறைந்து 2.45 கோடி டன் என்ற அளவிற்கே இருக்கும் என, சர்வதேச சர்க்கரை கழகம் மதிப்பிட்டுள்ளது.கரும்பு வேளாண்மை நடைமுறை காரணமாகவும், சர்க்கரை ஆலைகள் பெருந்தொகையை நிலுவையில் வைத்துள்ளதாலும், விவசாயிகளிடம் கரும்பு சாகுபடி செய்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், அடுத்த ஆண்டு கரும்பு விளைச்சல் குறைந்து, சர்க்கரை உற்பத்தி சரிவடையும் என, சர்வதேச சர்க்கரை கழகத்தின், மூத்த பொருளாதார வல்லுனர் செர்கி குடோஷ்னிகோய் தெரிவித்துள்ளார்.
மறுப்பு:ஆனால், இதை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின், நிர்வாக இயக்குனர் வினய்குமார் மறுத்துள்ளார். வரும் அக்டோபரில் தொடங்கும் 2012-13ம் சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2.50 கோடி டன்னாக இருக்கும் என, அவர் மேலும் கூறினார்.இஸ்மா தலைமை இயக்குனர் அபினேஷ் வர்மா கூறும்போது, "வரும் ஆண்டின் கரும்பு உற்பத்தி குறித்து, இப்போதே துல்லியமாக கூற முடியாது. சர்க்கரை உற்பத்தி உபரியாக கூட இருக்க வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தார்.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கைப்படி, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இதுவரை நாட்டின், கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு, 44.12 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 43.23 லட்சம் ஹெக்டேராக இருந்தது என, மத்திய வேளாண் மற்றும் கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.ஆக, இடைப்பட்ட காலத்தில், கூடுதலாக, 89 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிற்கு கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. சாதாரணமாக, கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு, 47.45 லட்சம் ஹெக்டேர் என்ற அளவிற்கு இருக்கும்.
உத்தரபிரதேசம்:கணக்கீட்டு காலத்தில், உத்தரபிரதேசத்தின் கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு, 82 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் (66 ஆயிரம் ஹெக்டேர்), மகாராஷ்டிரா (51 ஆயிரம்), கர்நாடகா (50 ஆயிரம் ஹெக்டேர்), பீகார் (21 ஆயிரம் ஹெக்டேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.மேலும், மத்திய பிரதேசம் (14 ஆயிரம் ஹெக்டேர்), அசாம் (5,000 ஹெக்டேர்), ஆந்திர பிரதேசம் மற்றும் பஞ்சாப் (3,000 ஹெக்டேர்), உத்தரகாண்ட் (1,000) போன்ற மாநிலங்கள் உள்ளன என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|