பதிவு செய்த நாள்
02 மே2012
00:24
புதுடில்லி:நடப்பாண்டு சோயா, கொத்தவரை மற்றும் நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, இந்த மூன்று எண்ணெய் வித்துக்களின் விலை உயர்ந்ததால், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், நடப்பாண்டு இவற்றை அதிக பரப்பளவில் பயிரிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொத்தவரை:உணவுப் பொருள்கள், பல்வேறு ரசாயனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க கொத்தவரை பயன்படுகிறது. இதன் உற்பத்தியில், இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. நாட்டின், ஒட்டு மொத்த கொத்தவரை ஏற்றுமதியில், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது.ராஜஸ்தான் மாநில விவசாயிகள், கோடை காலமான மார்ச் மற்றும் ஏப்ரலில் முதன் முறையாக கொத்தவரை பயிரிட்டுள்ளனர். இவை, வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் அறுவடை செய்யப்படும். இவ்வாண்டு, மழை பொழிவு வழக்கம் போல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கொத்தவரை விளைச்சல் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகா:பொதுவாக, ஜூலையில் கொத்தவரை நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அக்டோபரில் அறுவடை செய்யப்படும். நடப்பாண்டில், கர்நாடகாவிலும் கொத்தவரை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, நடப்பாண்டு, கொத்தவரை பயிரிடும் பரப்பளவு மூன்று மடங்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இதன் உற்பத்தி 1.20 கோடி மூட்டைகளில் (ஒரு மூட்டை-100 கிலோ) இருந்து 4 கோடி மூட்டைகளாக உயரும் என்று தெரிகிறது.
கடந்த 2011ம் ஆண்டு 35 லட்சம் ஹெக்டரில் கொத்தவரை பயிரிடப்பட்டது. மும்பை சந்தையில், சென்ற மார்ச் மாதம், 100 கிலோ கொத்தவரை விதை, 80 ஆயிரத்து 970 ரூபாயாக உயர்ந்திருந்தது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், இதன் விலை 8,750 ரூபாய் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது.
முன்பேர வர்த்தகம்:வேளாண் விளைபொருள் முன்பேர வர்த்தகத்தில்,கொத்தவரை விலை செயற்கையாக உயர்த்தப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, இதன் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு வேளாண் விளைபொருள் முன்பேர சந்தை ஆணையம் தடை விதித்துள்ளது.
எனினும், சர்வதேச அளவில் கொத்தவரைக்கான தேவை அதிகரித்து வருவது தான் இந்த விலை உயர்விற்கு காரணம் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். சர்வதேச பொருளாதார நெருக்கடி நிலையிலும், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகள் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து கொத்தவரையை இறக்குமதி செய்து கொண்டன.
சோயா:சோயா உற்பத்தியும், இவ்வாண்டு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 101 லட்சம் ஹெக்டரில் சோயா பயிரிடப்பட்டுள்ளது. இத்துடன், மேலும் 5-7 லட்சம் ஹெக்டேர் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஒரு குவிண்டால் சோயா, 3,500 ரூபாய் என்ற அளவில் விலை போகிறது. இது, குறைந்த பட்ச ஆதரவு விலையான 1,690 ரூபாயை விட அதிகமாகும்.
இந்த விலை உயர்வால் கவரப்பட்ட விவசாயிகள், பருத்தி சாகுபடியை கைவிட்டு, சோயா உற்பத்திக்கு மாறியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா,மகாராஷ்ட்ரா ஆகிய
மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், வழக்கமான பருத்தி சாகுபடியை நிறுத்திவிட்டு, சோயா பயிருக்கு மாறியுள்ளனர். பாசன வசதி அதிகமின்றி, சுலபமாக வளர்க்கக் கூடியது என்பதாலும், விவசாயிகள் சோயா பயிருக்கு மாறியுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.
நிலக்கடலை:சோயா மட்டுமின்றி, நிலக்கடலையிலும் அதிக வருவாய் கிடைப்பதால், அதனை பயிர் செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, பருத்தி, ஆமணக்கை விட, சோயா மற்றும் நிலக்கடலையில் விவசாயிகளுக்கு கூடுதல் ஆதாயம் கிடைக்கிறது. இதனால் தான் இவற்றின் வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|