பதிவு செய்த நாள்
03 மே2012
10:03
சென்னை : அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில், 100 கோடி ரூபாய் செலவில், உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், விதி 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் செயல்பட்டு வரும், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள்; 24 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என, மொத்தம், 93 கல்லூரிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. 100 கோடி ரூபாய் செலவில், இந்த வசதிகள் மேம்படுத்தப் படும். இந்நிதியில் இருந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவைப்படும், மேஜை, நாற்காலிகள் வாங்குதல்; நவீன கரும்பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் அமைத்தல்; மொழி ஆய்வகங்களுக்கு கணினி மேஜைகள், நாற்காலிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாணவர்கள், தங்கள் பாடங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்காக, தரம் வாய்ந்த ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்தப் படும்.
குடிநீர், கழிப்பறை வசதி : உணவறை கூடங்களை மேம்படுத்துதல், தரமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல் இதில் அடங்கும். அரசு கல்லூரிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இதுவரை இல்லாத அளவாக, 100 கோடி ரூபாய் வழங்கப் படுகிறது. இதன்மூலம், அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அனைத்து வசதிகளையும் பெற வழிவகை செய்துள்ளதுடன், இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பட்டு, அவர்கள், அகில இந்திய அளவில் முன்னிலை இடத்தைப் பெறவும் வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|