பதிவு செய்த நாள்
04 மே2012
00:57
கம்பம்:தேனி மாவட்டத்தில், விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கடந்த மூன்று ஆண்டுகளில், 1 கோடியே 10 லட்சம் கிலோ உளுந்து, பாசிப்பயறு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு பாசனத்தில், கூடலூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை, 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
முதல் போகம், ஜூன் மாதம் துவங்கி, செப்டம்பர் வரை நடைபெறும். இரண்டாம் போகம், அக்டோபரில் துவங்கி ஜனவரி வரை நடக்கும். ஜனவரி மூன்றாவது வாரத்தில், இரண்டாம் போக நெல் அறுவடை முடிந்த பின், நெல் தரிசில் உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்வது வழக்கம்.ஜனவரி இறுதியில் சாகுபடியாகும் பயறு வகைகள், ஏப்ரல் மாதம் அறுவடையாகும். அதன் பிறகு, ஜூன் மாதம் முதல் போகத்திற்கான பணிகள் துவங்கும்.
உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு, இருபோக நெல் சாகுபடியில் கிடைக்கும் வருவாயை போன்று, பெரிய அளவில் வருவாய் கிடைத்து வந்தது. பயறு வகை உற்பத்தியும் அதிகரித்தது. கடந்த மூன்றாண்டுகளாக, தேனி மாவட்டத்தில், விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்வதை கைவிட்டுள்ளனர்.
ஒரு ஏக்கரில் உளுந்து, பாசிப்பயறு மகசூல் சராசரியாக, 250 கிலோ வரை கிடைக்கும். சாகுபடி இல்லாததால் ஆண்டிற்கு, 73 லட்சம் கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளில், 1 கோடியே 10 லட்சம் கிலோ உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயத்துறை அதிகாரிகள் கூறுகையில்," முதல் போக அறுவடை முடிந்தவுடன், நிலத்தை ஒரு மாதம் தரிசாக விட்டு வைக்கின்றனர். இதனால், இரண்டாம் போக அறுவடை தாமதமாவதால், உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்ய முடியவில்லை' என்றனர்.ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு, கோடை மழை இல்லாததும் தான் உளுந்து, பாசிப்பயறு சாகுபடியை கைவிடக் காரணம், என விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|