பதிவு செய்த நாள்
07 மே2012
02:31
புதுடில்லி:நடப்பு 2011-12ம் பருவத்தில் (ஆகஸ்ட்-ஜூலை), சர்வதேச பருத்தி வர்த்தகம், கடந்த பருவத்தை விட 13 சதவீதம் அதிகரித்து, 86 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, சர்வதேச பருத்தி ஆலோசனை குழு தெரிவித்துள்ளது. இதற்கு, சீனா மிக அதிகளவில் பருத்தியை இறக்குமதி செய்து கொள்ளும் என மதிப்பிடப் பட்டுள்ளதுதான் காரணமாகும். பருத்தி இறக்குமதி:நடப்பு பருவத்தில், உலகளவிலான பருத்தி இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு 52 சதவீத அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச பருத்தி வர்த்தகம் சூடுபிடிக்கும். அதேசமயம், இதர நாடுகளின் பருத்தி இறக்குமதி, 18 சதவீதம் குறைந்து, 42 லட்சம் டன்னாக குறையும் என, இக்குழு தெரிவித்துள்ளது.ஒட்டு மொத்த அளவில், அமெரிக்காவின் பருத்தி இறக்குமதி, 21 சதவீதம் சரிவடைந்து
25 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. :ஏற்றுமதி இலக்கு ;இருப்பினும், இந்தியா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து, அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி இலக்கு அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு 2011-12ம் பருவத்தில், சீனாவின், பருத்தி கையிருப்பு கடந்த ஆண்டை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, 50 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இதர நாடுகளின் பருத்தி கையிருப்பு, 14 சதவீதம் என்றளவில் உயர்ந்து, 81 லட்சம் டன்னாக இருக்கும் என, சர்வதேச பருத்தி ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
வரும் பருவத்தில் (2012-13), சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தி, நடப்பு பருவத்தை விட, 7 சதவீதம் குறைந்து 2.52 கோடி டன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில், சோயா உள்ளிட்ட இதர தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் பருத்திக்கு பதிலாக மேற்கண்ட தானியங்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து, வரும் பருவத்தில், சர்வசேத அளவில், பருத்தி சாகுபடி பரப்பளவு, நடப்பு பருவத்தை விட, 7 சதவீதம் குறைந்து, 3.36 கோடி ஹெக்டேராக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
சீனா:வரும் 2012-13ம் பருவத்தில், சீனாவின் பருத்தி உற்பத்தி 64 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, நடப்பு பருவத்தை விட, 13 சதவீதம் குறைவாக இருக்கும் என சர்வதேச பருத்தி ஆலோசனை குழு மேலும் கூறியுள்ளது.
இதற்கு, வரும் பருவத்தில், சீனா, இந்தியா, பாகிஸ்தான், பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் பருத்தி உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடு தான் காரணம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|