பதிவு செய்த நாள்
10 மே2012
10:23
புதுடில்லி : நாட்டின் உணவுதானிய உற்பத்தி என்பது, முன்னெப்போதும் இல்லாததை காட்டிலும் அதிகமாக, இந்த ஆண்டு இருந்ததால், கோதுமை,நெல் ஆகியவற்றை சேமித்து வைக்க அரசு கிட்டங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், தங்களது உணவுதானியங்களை வீதிகளிலும், கோவில்களிலும், மசூதிகளிலும் கொட்டி வைத்து உள்ளனர். நாடெங்கிலும் இதே நிலைமை நீடித்து வருகிறது.
உணவு, தானியங்கள் வீணாவது குறித்து, லோக்சபாவில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் முடிவில் பதிலளித்த, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: உணவுதானியங்களை சேமித்து வைக்கும் விஷயத்தில், பிரச்னை தீவிரமாக இருப்பது உண்மை தான். சணல் சாக்குப்பைகளுக்கு கடும் தட்டுப்பாடு இதற்கு மிக முக்கிய காரணம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில், மத்திய உணவு அமைச்சகத்தை மாநில அரசு பிரதிநிதிகள் அணுகி, தங்களுக்கு தேவையான சாக்குகளின் எண்ணிக்கையை சொல்லுவர் . இதன் அடிப்படையில், மத்திய அரசின் வினியோக இயக்குனரகம் வாயிலாக, மேற்குவங்கத்தில் உள்ள சணல் சாக்குப்பை தொழிற்சாலைக்கு தகவல் அனுப்பி, அதைப்பெற்று முன்னதாகவே மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு போதிய சாக்குப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. மத்திய பிரதேசத்திலும், உத்தரபிரதேசத்திலும் தான் பிரச்னை. மத்திய பிரதேசத்தில் கடந்த நவம்பரில், எதிர்பார்க்கப்பட்ட கொள்முதல் 65 லட்சம் டன் மட்டுமே. ஆனால், இது 85 லட்சம் டன் கொள்முதல் ஆகிவிட்டது. உத்தரபிரதேசத்திலும் இதேபோல பிரச்னை உள்ளது. இது, மத்திய அரசுக்கு கவலையாகத்தான் உள்ளது.
மழைக்காலம்: மழைக்காலம் வேறு வரப்போவதால், போர்க்கால நடவடிக்கை என்பது, இவ்விஷயத்தில் அவசியமாகிறது. மேற்குவங்க சாக்குப்பை தொழிற்சாலையில் மாதம் ஒன்றுக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் பைகள் தயாரிக்கப்படுகின்றன. இதை இன்னும் கூடுதலாக, 25 ஆயிரம் பைகள் தயாரிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோதுமை கூலி: ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தற்போது கூலி தரப்பட்டு வருகிறது. இதை மாற்றிவிட்டு கூலிக்கு பதிலாக, கோதுமையையும், அரிசியையும் கூட அளிக்கலாமா என்றும், அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஆனாலும், இதுகுறித்து உடனடியாக இன்னும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. உணவுதானியங்கள் வீணாகக் கூடாது. விவசாயிகளின் விளைச்சல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு விரைவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கூட அழைத்துப் பேசி, ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவும் திட்டம் உள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|