பதிவு செய்த நாள்
13 மே2012
01:10
நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில் மிகவும் மோசமாக இருந்தது. உலக நிலவரங்கள் நன்கு இல்லாத நிலையில், உள்நாட்டிலும் தொழில் துறை உற்பத்தியில் பின்னடைவு உள்ளிட்ட பல பாதகமான அம்சங்களால், ஒட்டுமொத்த அளவில், பங்கு வர்த்தகம் மிகவும் சரிவடைந்து போனது.சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் வெளி மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம் சிக்குண்டுள்ளது.
"சென்செக்ஸ்' 17,000 புள்ளிகளுக்கு கீழும், "நிப்டி' 5,000 புள்ளிகளுக்கு கீழும் சரிவடைந்து போனது.சென்ற வெள்ளியன்று, மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 127 புள்ளிகள் குறைந்து, 16,292 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 36 புள்ளிகள் சரிவடைந்து, 4,928 புள்ளிகளிலும் நிலைபெற்றன. ஒட்டுமொத்த அளவில், "சென்செக்ஸ்' நடப்பு வாரத்தில் மட்டும், 620 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது.
தொழில் துறை உற்பத்தி:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, மைனஸ் 3.5 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டுள்ளது. முந்தைய பிப்ரவரி மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.1 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல அறிகுறியாக இல்லை.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, தற்போது மெல்ல மெல்ல சரிவடைந்து வருகிறது. மீண்டும் பழைய நிலையை எட்ட முடியுமா என்ற நிலை உருவாகி வருகிறது.
ஏர்-இந்தியா:பொதுத் துறையைச் சேர்ந்த ஏர்-இந்தியா நிறுவனம், ஒரு காலத்தில், "மகா ராஜா ' என்ற அந்தஸ்துடன் வானில் பவனி வந்தது. ஆனால், இன்று, இந்நிறுவனம், அதிகளவில் கடன் சுமையை கொண்டுள்ளது. இன்றைய நிலையில், இந்நிறுவனத்திற்கு, 67 ஆயிரத்து 520 கோடி ரூபாய் கடன்கள் உள்ளன.விமானங்களில், பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விமான நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. ஆனால், பெரும்பாலான விமானச் சேவை நிறுவனங்கள், இழப்பில் தான் செயல்பட்டு வருகின்றன. இதற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால், இத்துறை நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தே காணப்படுகிறது.
அன்னிய நேரடி முதலீடு:தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவில், அன்னிய நிறுவனங்கள், மேற்கொள்ளும் நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது என்பது ஒன்று தான் ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, முந்தைய நிதியாண்டை விட, 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாயின் வெளி மதிப்பு:டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதை தடுப்பதற்கு, நடப்பு வாரத்தில், ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை, "யானை பசிக்கு சோளப் பொறி' வழங்கியதை போன்று இருந்தது. நடவடிக்கை எடுத்தும், ரூபாயின் மதிப்பு உயராததால், ரிசர்வ் வங்கி, ஒரு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
முன்பு, ஏற்றுமதியாளர்கள் பெறும், 100 சதவீத தொகையையும், வெளிநாட்டு பணமாகவே வைத்திருக்கலாம். இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது, 50 சதவீத தொகையை ரூபாயாக மாற்றி கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்ற வாரத்தில் மட்டும், ரிசர்வ் வங்கி, 55 கோடி டாலரை வெளிச் சந்தையில் விற்பனை செய்துள்ளது.
ரிலையன்ஸ்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவில் லாப வரம்பு குறைந்து வருகிறது. இந்நிறுவனம், வேறு பல தொழில்களில் களம் இறங்கும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்திற்கு அதிகளவில் ரொக்க கையிருப்பு உள்ளது.தற்போது இந்நிறுவனம் வங்கி துறையில் களமிறங்கும் வகையில், எச்.டீ.எப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், கனரா பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்.பீ.ஐ., மற்றும் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் பங்குகளில், 1,200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது.வங்கி துறையில் சீர்திருத்தம் கொண்டு வரும்பட்சத்தில்,இந்நிறுவனம், வங்கி துறையில் களமிறங்கக்கூடும் என பேசப்படுகிறது.
புதிய முதலீடுகள்:நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், இனி, எவரும், முதலீடு செய்ய முன்வருவார்களா என்பது, பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. ஒரு காலத்தில், புதிய வெளியீடுகளில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது. ஆனால், இன்று முதலீட்டாளர்களுக்கு இழப்புதான் மிஞ்சுகிறது.ஏனெனில், பல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட பங்கு வெளியீட்டிற்கு பிறகு, வெளியீட்டு விலையை விட மிகவும் சரிவடைந்து போயுள்ளன.கடந்த ஆண்டு வெளிவந்த எல் அண்டு டி பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் நிறுவனங்கள் உட்பட, அண்மையில் வெளியிடப்பட்ட திரிபோவன்தாஸ், என்.பீ.சி.சி., போன்ற நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போயுள்ளது.
தங்கம்:தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என, கடந்த வாரம் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கேற்றாற்போல் இதன் விலை குறைந்துள்ளது. இது, வரும் வாரம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. ஒரு கிலோ வெள்ளி, 53 ஆயிரத்து 690 ரூபாயிலும், 10 கிராம் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 385 ரூபாயிலும் வந்து நிற்கிறது. இன்னும் சிறிது காத்திருக்கலாம்.
வரும் வாரம் எப்படி?"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளை தொட்டு விடுவேன் என்று பயமுறுத்துகிறது. நிப்டி 5,000க்கும் கீழே öŒன்றுவிட்டது. உலக நிலவரங்களும், உள்நாட்டு நடப்புகளும் சந்தைக்கு ஊக்கமளிப்பதாக இல்லை. சந்தையில் தொடர்ந்து இருப்போம் என்று நினைக்கும் முதலீட்டாளர்கள் மட்டும், சிறப்பாக செயல்படும் நிறுவனப் பங்குகளை வாங்கலாம். மற்றவர்கள் சிறிது காலத்திற்கு ஒதுங்கியே இருக்கலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|