பதிவு செய்த நாள்
14 மே2012
00:41
பொதுத்துறை வங்கிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 60 ஆயிரம் ஏ.டி.எம்.,களை திறக்க திட்டமிட்டுள்ளன. அனைத்து பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்.,களை நிறுவுதல், இயக்குதல் தொடர்பான பணிகள் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இதற்கான நடைமுறைகளை உருவாக்க, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
விரிவாக்க திட்டங்கள்:இப்பணிகள் காரணமாக, கடந்த 6 - 8 மாதங்களாக பொதுத்துறை வங்கிகள், ஏ.டி.எம்., சார்ந்த விரிவாக்கத் திட்டங்களை தள்ளி வைத்திருந்தன.
தற்போது, குழுவின் அறிக்கைப்படி, ஏ.டி.எம்., களை நிறுவி, இயக்கும் பணிகள் வெளியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் அடுத்த மாதம் முடிவடைந்து, நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று நிதிச் சேவை நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத்திட்டப்படி, 22 பிராந்தியங்களுக்கு தேவைப்படும் ஏ.டி.எம்.,களை நிறுவ, 16 வட்டங்கள் உருவாக்கப்பட்டு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும்.இதன்படி, பொதுத்துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கி ஆகியவை ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனங்களை தேர்வு செய்ய உள்ளன.
இந்தியாவில், நடப்பாண்டு ஏப்ரல் நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 25 ஆக உள்ளது. 2010-11ம் நிதியாண்டு நிலவரப்படி, நாட்டின் மொத்த ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 505 ஆக இருந்தது. இவற்றில், பொதுத்துறை வங்கிகள் (49 ஆயிரத்து 487),தனியார் வங்கிகள் (23 ஆயிரத்து 651), பழைய தனியார் வங்கிகள் (4,126) மற்றும் அயல்நாட்டு வங்கிகள் (1,367) ஆகியவற்றின் ஏ.டி.எம்.,கள் அடங்கும்.
நாட்டில் உள்ள மொத்த ஏ.டி.எம்., களில், 70 சதவீதம் நகர்புறங்களில் தான் உள்ளன.
கிராமங்கள்:அடுத்த இரண்டு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளின் விரிவாக்கத் திட்டங்களால், கூடுதலாக 60 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் திறக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் நிறுவப்பட உள்ளன. 'அதற்கேற்ப இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படும்' என நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்.பி.சி) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்விந்தர் கில் தெரிவித்தார்.நகர்புறங்களில் உள்ள ஏ.டி.எம்.களை கிராமப்புறங்களில் பயன்படுத்த முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
என்.பி.சி நிறுவனம், 23 மொழிகளில் ஏ.டி.எம்.,களை தயாரிக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மொத்த ஏ.டி.எம்.,களில் 20 சதவீதம், தனியார் வங்கிகளுக்கு சொந்தமாக உள்ளன. வங்கி சாராத நிறுவனங்கள், நுகர்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் ஏ.டி.எம்.,களை நிறுவ அனுமதி வழங்கும்பட்சத்தில், அவற்றின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|