பதிவு செய்த நாள்
14 மே2012
00:48
புதுடில்லி:நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 4.64 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் கையாளப்பட்ட சரக்கை விட, 6.33 சதவீதம் (4.95 கோடி டன்) குறைவு என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மந்த நிலை:இந்தியாவில், சென்னை, மும்பை, பரதீப், கோல்கட்டா உள்ளிட்ட, 12 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய, துறைமுகங்களும் உள்ளன. சர்வதேச பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, ஒட்டு மொத்த அளவில், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. எண்ணூர், புதிய மங்களூர் மற்றும் மும்பை துறைமுகங்கள் அதிக அளவில் சரக்கை கையாண்டுள்ளன. அதேசமயம், கோல்கட்டா, சென்னை, பரதீப் உள்ளிட்ட இதர துறைமுகங்கள் குறைந்த அளவில் சரக்கை கையாண்டுள்ளன.
சென்ற ஏப்ரல் மாதத்தில், எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 13 லட்சத்து 71 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், கையாண்டதை விட, 28.25 சதவீதம் (10 லட்சத்து 69 ஆயிரம் டன்) அதிகமாகும்.
தூத்துக்குடி துறைமுகம்:மதிப்பீட்டு காலத்தில், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 3.49 சதவீதம் வளர்ச்சியடைந்து, 23 லட்சத்து 48 ஆயிரம் டன்னிலிருந்து, 24 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 20.28 சதவீதம் குறைந்து, 53 லட்சத்து 90 ஆயிரம் டன்னிலிருந்து, 42 லட்சத்து 97 ஆயிரம் டன்னாக சரிவடைந்துள்ளது. கோல்கட்டாவில், உள்ள இரண்டு துறைமுகங்கள், கையாண்ட சரக்கின் அளவு, 22.56 சதவீதம் சரிவடைந்து, 40 லட்சம் டன்னிலிருந்து, 31 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இதில், கோல்கட்டா டாக் சிஸ்டம், கையாண்ட சரக்கு, 15.84 சதவீதம் குறைந்து, 10 லட்சத்து 67 ஆயிரம் டன்னிலிருந்து, 8 லட்சத்து 98 ஆயிரம் டன்னாகவும், ஹால்டியா டாக் காம்பளக்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கு, 25 சதவீதம் சரிவடைந்து, 29 லட்சத்து 36 ஆயிரம் டன்னிலிருந்து, 22 லட்சம் டன்னாகவும் குறைந்துள்ளது. பரதீப் துறைமுகம், கையாண்ட சரக்கு, 22.53 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 52 லட்சத்து 60 ஆயிரம் டன்னிலிருந்து, 40 லட்சத்து 75 ஆயிரம் டன்னாகவும், விசாகப்பட்டினம் துறைமுகம், கையாண்ட சரக்கு, 10.94 சதவீதம் சரிவடைந்து, 55 லட்சத்து 67 ஆயிரம் டன்னிலிருந்து, 49 லட்சத்து 58 ஆயிரம் டன்னாகவும் குறைந்துள்ளது. மங்களூர் துறைமுகம்:கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கு, 0.21 சதவீதம் குறைந்து, 14 லட்சத்து 9 ஆயிரம் டன்னிலிருந்து, 14 லட்சத்து 6 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், புதிய மங்களூர் துறைமுகம், கையாண்ட சரக்கு, 19.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24 லட்சத்து 61 ஆயிரம் டன்னிலிருந்து, 29 லட்சத்து 31 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. மர்மகோவா துறைமுகம், கையாண்ட சரக்கு, 18.68 சதவீதம் குறைந்து, 49 லட்சம் டன்னிலிருந்து, 39 லட்சத்து 86 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. மும்பை துறைமுகம், கையாண்ட சரக்கு, 16.41 சதவீதம் வளர்ச்சிகண்டு, 47 லட்சத்து 53 ஆயிரம் டன்னிலிருந்து, 55 லட்சத்து 33 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் துறைமுகம், கையாண்ட சரக்கு, 0.59 சதவீதம் குறைந்து, 56 லட்சம் டன்னிலிருந்து, 55 லட்சத்து 75 ஆயிரம் டன்னாகவும், கண்ட்லா துறைமுகம், கையாண்ட சரக்கு, 0.41 சதவீதம் சரிவடைந்து, 67 லட்சத்து 88 ஆயிரம் டன்னிலிருந்து, 67 லட்சத்து 60 ஆயிரம் டன்னாகவும் குறைந்துள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், மேற்கண்ட துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விரிவாக்கம்:இதன்படி, துறைமுகங்களை ஆழப்படுத்துதல், கப்பல் நிறுத்தும் தளங்களை விரிவுபடுத்துதல், இணைப்பு சாலை, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சரக்குகளை அதிகள அளவில் கையாளும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் சிறப்பாக நிறைவு பெறும் போது, இந்திய துறைமுகங்கள் கையாளும் சரக்குகளின் அளவு, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|