பதிவு செய்த நாள்
23 மே2012
00:27
தமிழ்நாடு சிமென்ட் கழகத்திற்கு (டான்செம்), சொந்தமான இரண்டு சிமென்ட் ஆலைகளை, 515 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், வங்கி கடனுக்கான வரம்புத் தொகை இன்னும் வழங்கப்படாததால், அரசு அனுமதி பெற்று பல மாதங்கள் ஆகியும், கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இந்தியாவிலேயே, தமிழகத் தில் தான் முதல் முதலாக அரசு நிறுவனம் மூலம் சிமென்ட் ஆலை நிறுவப் பட்டது. தமிழகத்தில், "டான்செம்' நிறுவனத்துக்கு சொந்தமாக, ஆலங்குளம், அரியலூர் ஆகிய இடங்களில் சிமென்ட் ஆலைகள் உள்ளன.
கல்நார் தகடு ஆலை:இவை தவிர, ஆலங்குளத்தில், கல்நார் தகடு ஆலை, விருதாச்சலத்தில், கற்குழாய் ஆலை, மாயனூரில், கல்நார் சிமென்ட் அழுத்தக் குழாய் ஆலை ஆகியவை உள்ளன. தொடர் நஷ்டத்தால், கடந்த 2008ம் ஆண்டு, மாயனூர் ஆலை மூடப்பட்டது."டான்செம்' நிறுவன ஆலைகள் தயாரிக்கும் சிமென்ட், மத்திய, மாநில அரசுகளின் கட்டுமான திட்டங்களுக்கு, அரசு நிர்ணயித்து உள்ள குறைந்தபட்ச விலையான, 50 கிலோ கொண்ட மூட்டை, 224 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆலங்குளம் ஆலைக்கு ரூ.165 கோடி:கடந்த 1969ம் ஆண்டு நிறுவப்பட்ட, ஆலங்குளம் சிமென்ட் ஆலை, ஆண்டுக்கு, இரண்டு லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு, ஈரப்பத தொழில்நுட்பத்தில், சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. இது, சிமென்ட் தயாரிப்பில், மிகவும் பழமையான தொழில்நுட்பம்.தொழில்நுட்பம் புதுப்பிக்கப் படாததால், இங்கு சிமென்ட் உற்பத்திக்கான மொத்த செலவில், மின்சாரம் மற்றும் எரிபொருளுக்காக மட்டும், 60 சதவீத தொகை செலவிடப்படுகிறது.
இந்த ஆலையை புதுப்பித்து, ஈரப்பதத்திலிருந்து, உலர்பத தொழில்நுட்பத்துக்கு மாற்ற, டான்செம் முடிவு செய்தது.இதன்படி,சுண்ணாம்பு கல் அரவை ஆலை, சிமென்ட் அரவை ஆலை, கிளிங்கர் சூளையை நவீனமயமாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிடப் பட்டது. இதோடு, ஆலையின் உற்பத்தி திறன், இரண்டு லட்சம் டன்னில் இருந்து, நான்கு லட்சம் டன்னாக உயர்த்த முடிவு செய்யப் பட்டது. மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, தமிழக அரசு, அனுமதியுடன், 165 கோடி ரூபாய் வங்கி கடன் பெற முடிவு செய்யப் பட்டது.
அரியலூர் ஆலைக்கு ரூ.350 கோடி:1979ல் தொடங்கப்பட்ட, அரியலூர் சிமென்ட் ஆலையில், உலர்பத தொழில்நுட்பம் மூலம் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, ஐந்து லட்சம் டன் சிமென்ட் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலையின் உற்பத்தி திறனை, 15 லட்சம் டன்னாக அதிகரிக்கும் நடவடிக்கையில், டான்செம் களம் இறங்கியது. இதற்காக, அரசு அனுமதியுடன் ஆலை விரிவாக்கத்திற்காக, 350 கோடி ரூபாய் கடன் பெற முடிவு செய்தது.
அனுமதி:இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத,"டான்செம்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரு ஆலைகளின் விரிவாக்கத்திற்காக, 515 கோடி ரூபாய் வங்கி கடன் பெறுவதற்கு, தமிழக அரசு, சென்ற 2011ம் ஆண்டு துவக்கத்தில் அனுமதி வழங்கியது. நிறுவனத்திற்கு, கடன் வழங்க பொதுத் துறையைச் சேர்ந்த ஐ.ஓ.பி., ஐ.டி.பி.ஐ. பேங்க் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.ஆனால், வங்கி கடனுக்கான, மொத்த தொகையில், 15 சதவீத வரம்பு தொகை, இதுவரை வழங்கப்படவில்லை. தமிழக அரசு, வரம்புத் தொகை வழங்க, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால், அது, ஆலங்குளம் மற்றும் அரியலூர் சிமென்ட் ஆலைகளின் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு வரபிரசாதமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
செலவை குறைக்க நடவடிக்கை:கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான "டான்செம்' நிறுவனம், கடந்த 2002ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, மத்திய அரசின், தொழில் மற்றும் நிதி புனரமைப்பு வாரியத்தின் (பி.ஐ.எப்.ஆர்) கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதையடுத்து, இந்நிறுவனத்திற்கு கடன் வழங்க வங்கிகள் தயங்கின.
நிதி நிலைமையை சமாளிக்க, தொடங்கியது முதல், 45 கோடி ரூபாய்க்கும் மேலாக, நஷ்டத்தில் இயங்கிய, மாயனூர் ஆலை, கடந்த 2008ம் ஆண்டு மூடப்பட்டது.
நிறுவனத்தின் செலவை குறைக்கும் வகையில், இவ்வாலையில் பணியாற்றிய, 118 பேர் விருப்ப ஓய்வுதிட்டத்திலும், 54 பேர் முழு இழப்பீடு திட்டத்திலும் வெளியேற்றப் பட்டனர்.இதையடுத்து, 2010ம் ஆண்டுக்கு பின், பி.ஐ.எப்.ஆர். கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய, "டான்செம்' நிறுவனம், சென்ற நிதியாண்டில், 56 லட்சம் ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- வீ.அரிகரசுதன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|