பதிவு செய்த நாள்
26 மே2012
01:28
புதுடில்லி:நடப்பு எண்ணெய் பருவத்தில் (அக்., - செப்.,), நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதிக்கான செலவினம், 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது, கடந்த பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட செலவினத்தை விட, 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என, இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.தனிநபர் பயன்பாடு:உள்நாட்டில், தனிநபர் தாவர எண்ணெய் பயன்பாடு, 3-5 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே, இதன் இறக்குமதி குறைய வாய்ப்பில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கீழ், இடம்பெறும் தாவர எண்ணெய்க்கு, உள்நாட்டில், அதிக தேவை இருந்து வருகிறது.
நாட்டின் மொத்த இறக்குமதியில், பெட்ரோலிய பொருட்களுக்கு அடுத்தபடியாக, சமையல் எண்ணெய் வகைகளை உள்ளடக்கிய தாவர எண்ணெய் உள்ளது.
நடப்பு பருவத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 95 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, முந்தைய பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 15 சதவீதம் (88 லட்சம் டன்) அதிகமாகும்.உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, எண்ணெய் வித்துகள் உற்பத்தி இல்லாததால், நம் நாடு, அதிகளவில், தாவர எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது. இனி வரும் மாதங்களில், இதன் விலை, 15-20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி:சென்ற ஏப்ரல் மாதத்தில், மட்டும், இதன் இறக்குமதி, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, அதாவது, 4 லட்சத்து 75 ஆயிரத்து 123 டன்னிலிருந்து, 9 லட்சத்து 25 ஆயிரத்து 334 டன்னாக உயர்ந்துள்ளது.நடப்பு பருவத்தில், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 31 சதவீதம் உயர்ந்து, 47 லட்சத்து 14 ஆயிரத்து 963 டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பருவத்தின் இதே காலத்தில், 36 லட்சத்து 3 ஆயிரத்து 541 டன்னாக இருந்தது என, மேத்தா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|