பதிவு செய்த நாள்
26 மே2012
01:30
மும்பை:பெட்ரோல் விலை உயர்வால், மாருதியின் ஆல்டோ, ஹூண்டாயின் இயான் உள்ளிட்ட பெட்ரோலில் இயங்கும் கார்களின் விற்பனை குறையும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இதை தடுக்க, இந்நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பெட்ரோல் விலை உயர்வு:சென்ற புதன் அன்று, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7.53 ரூபாய் உயர்த்தின. இதையடுத்து, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, டெல்லியில் 73.18, மும்பையில் 78.57, கோல்கட்டாவில் 77.88, சென்னையில் 77.53 ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வால், பெட்ரோல் கார்களின் விற்பனை குறைந்து, டீசல் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே டீசல் கார்களின் விற்பனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.
டீசல் விலை கட்டுப்பாடு, மத்திய அரசிடம் உள்ளதால், அதன் விலை உயர்த்தப்பட்டாலும் லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில், ஒரு லிட்டர் டீசல் விலை 43.95 ரூபாயாக உள்ளது.
இதில் 5 ரூபாய் உயர்த்தப்பட்டாலும், அதிகபட்சம் 49 ரூபாய் என்ற அளவிற்கே இருக்கும். இதையடுத்து, பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இடையே, லிட்டருக்கு 28 ரூபாய் வித்தியாசம் காணப்படும்.
இதனால், பெட்ரோல் கார் வாங்குவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி:நாட்டில் பெட்ரோல் கார் விற்பனையில், மாருதி சுசூகியின் ஆல்டோ கார் முதலிடத்தில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக, இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இந்த சிறப்பை, சென்ற ஏப்ரல் மாதம் ஆல்டோ இழந்தது.
அம்மாதத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின் டீசலில் இயங்கும் ஸ்விப்ட் கார் விற்பனை, 19 ஆயிரத்து 484 ஆக அதிகரித்தது. அதே சமயம் ஆல்டோ கார் விற்பனை, 17 ஆயிரத்து 842 ஆக குறைந்தது.
ஆல்டோவை விட, ஸ்விப்ட் கார் விலை இருமடங்கு உயர்வாகும். இருந்தபோதிலும், பெட்ரோல் விலை உயர்வால், மக்களுக்கு, டீசல் கார் வாங்குவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மாருதி சுசூகி நிறுவனத்தின் ரிட்ஸ் டீசல் கார் விற்பனையும் உயர்ந்து வருகிறது.
ஹூண்டாய்:இதே போன்று, ஹூண்டாய் நிறுவனம், அண்மையில் அறிமுகப்படுத்திய பெட்ரோலில் இயங்கும் இயான் கார் விற்பனையும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, இந்நிறுவனம் புதிய திட்டத்தின் கீழ், பெட்ரோல் கார்களுக்கு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. 'பெட்ரோல் பிரைஸ் லாக் அஸ்யூரன்ஸ்' என்ற இத்திட்டத்தின் மூலம் பெட்ரோலில் இயங்கும் இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20 கார்களுக்கு, பெட்ரோல் செலவாக, மாதம் 3,100 ரூபாய் வரை, 7 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.நடப்பு மே மாதம் 31ம் தேதி வரை பெட்ரோல் கார் வாங்குவோருக்கு இச்சலுகை கிடைக்கும் என, ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், இம்மாத துவக்கத்தில் சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்களுக்கு '5 ஸ்டார் அஸ்யூரன்ஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கார் பராமரிப்பு முதல் சாலை உதவி வரையிலான ஒட்டுமொத்த சேவை வழங்கப்படுகிறது.
இது போன்ற கவர்ச்சிகரமான சலுகைத் திட்டங்களை மாருதி சுசூகி, ஹோண்டா சீயல் உள்ளிட்ட, பெட்ரோல் கார் வகைகளை அதிக அளவில் கொண்டுள்ள நிறுவனங்களும் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாட்டா மோட்டார்ஸ்:டொயோடா,ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு,வோக்ஸ்வேகன், டாட்டா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களிடம் டீசல் வகை வாகனங்கள் அதிகம் உள்ளன. அதனால், பெட்ரோல் விலை உயர்வால் இந்நிறுவனங்களின் விற்பனை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலில் இயங்கும் நானோ கார்கள், மாதம் 8,000 என்ற அளவில் விற்பனையாகின்றன. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்குள் டீசலில் இயங்கும் நானோ கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இவ்வகை கார் விற்பனை இருமடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே தொடக்க நிலை கார் பிரிவில், இக்கார், மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|