பதிவு செய்த நாள்
27 மே2012
00:22
புதுடில்லி:மகாராஷ்டிராவில், எதிர்பார்த்த அளவிற்கு பருத்தி விளைச்சல் இல்லாததால், நாட்டின் ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 10 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு 2011-12ம் பருத்தி பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் பருத்தி உற்பத்தி 3.47 கோடி பொதிகளாக (1பொதி-170 கிலோ) இருக்கும் என, மத்திய பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது. ஆனால், மத்திய வேளாண் அமைச்சகம் பருத்தி உற்பத்தி 3.52 கோடி பொதிகளாக இருக்கும் என தெரிவித்துள்ளது.மகாராஷ்டிரா:இந்நிலையில், பருத்தி உற்பத்தியில் முன்னணியில் உள்ள மகாராஷ்டிராவில், கடுமையான சூறாவளி காற்று காரணமாக பருத்தி விளைச்சல் குறைந்துள்ளது. மேலும், பாரம்பரிய வேளாண் விளைச்சல் சாராத பகுதிகளில் பயிரிடப்பட்ட பருத்தியின் உற்பத்தியும் குறைந்துள்ளது.
இதனால், நடப்பு பருத்தி பருவத்தில், அதன் உற்பத்தி குறையும் என ஜவுளி அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. நடப்பு பருத்தி பருவத்தில், பருத்தி பயிரிடும் பரப்பளவு, கடந்த பருவத்தை விட, 10 சதவீதம் அதிகரித்து, 1.21கோடி ஹெக்டேராக உள்ளது.
எனினும், இயற்கை இடர்பாடுகள், பாரம்பரியமற்ற பகுதிகளில் காணப்படும் சாதகமற்ற மண் வளம் உள்ளிட்ட காரணங்களால், பருத்தி உற்பத்தி மிகப் பெரிய அளவில் உயராது என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், முந்தைய பருவம் போன்று, ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக, 496 கிலோ அளவிற்கே பருத்தி உற்பத்தி இருக்கும் என, பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது.
இரண்டாவது இடம்:உலகளவில், பருத்தி உற்பத்தியில் இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற பருத்தி பருவத்தில், இந்தியாவின் பருத்தி உற்பத்தி, 34 கோடி டன்னாக இருந்தது. அதே சமயம், சர்வதேச சந்தையில் பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதன் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. இதனால், லாபமீட்டிய விவசாயிகள், நடப்பு பருவத்தில் பருத்தி பயிரிடும் பரப்பளவை அதிகரித்தனர். பாரம்பரியமாக பருத்தி பயிரிடும் பகுதி தவிர, புதிய பகுதிகளிலும் பருத்தியை பயிரிட்டனர். ஆனால், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால், பயிரிட்ட பரப்பளவிற்கேற்ப, பருத்தி உற்பத்தி அதிகரிக்கவில்லை.
குஜராத்:இந்தியாவில் பருத்தி உற்பத்தியில், மகாராஷ்டிராவும், குஜராத்தும் முன்னணியில் உள்ளன. இம்மாநிலங்களில் பருத்தி உற்பத்தி சரிவடைந்துள்ளதால், சந்தையில் அதன் வரத்து குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில், நடப்பு மே மாதம் 20ம் தேதி நிலவரப்படி பருத்தி வரத்து, சென்ற பருவத்தின் இதே காலத்தில் இருந்ததை விட, 18 சதவீதம் குறைந்து, 83 லட்சம் பொதிகளில் இருந்து 68 லட்சம் பொதிகளாக சரிவடைந்துள்ளது.
இதே போன்று, மதிப்பீட்டு காலத்தில், குஜராத்தின் பருத்தி வரத்து, 3.6 சதவீதம் குறைந்து, 98 லட்சம் பொதிகளாக வீழ்ச்சி கண்டுள்ளது.
அதே சமயம், இதே காலத்தில் ஆந்திராவின் பருத்தி வரத்து, 52 லட்சம் பொதிகளில் இருந்து, 54 லட்சம் பொதிகளாக அதிகரித்துள்ளது. பருத்தி பயிரிடும் முறை குறித்து விவசாயிகளிடம் போதிய அளவிற்கு விழிப்புணர்வு இல்லாததும், அதன் உற்பத்தி குறைய காரணம் என்று கூறப்படுகிறது. இதுவரை பருத்தி பயிரிடாத புதிய இடங்களின் மண்வளம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்பே, விவசாயிகள் பருத்தியை பயிரிட வேண்டும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|