பதிவு செய்த நாள்
27 மே2012
00:27
நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. என்றாலும், வார இறுதியில், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஒரு சில நிறுவனங்களின், கடந்த நிதியாண்டிற்கான, நிதி நிலை முடிவுகள், திருப்திகரமாக இருந்தது. இந்நிலையில், கடுமையாக சரிவடைந்து வந்த, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வீழ்ச்சியில் இருந்து, ஓரளவிற்கு மீண்டது.
பெட்ரோல் விலை, அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பல பொருட்களின் விலை உயரும். இருப்பினும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது.
சென்செக்ஸ்:வெள்ளியன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"சென்செக்ஸ்'
5 புள்ளிகள் சரிவடைந்து, 16,218 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 1 புள்ளி குறைந்து, 4,900 புள்ளிகளிலும் நிலைபெற்றன. ஒட்டுமொத்த அளவில், நடப்பு வாரத்தில், "சென்செக்ஸ்' 35 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
ஐரோப்பிய நாடுகளில், நிலவரம் நன்கு உள்ளது என்ற செய்தியால், வியாழனன்று, பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. ஆனால், உள்நாட்டு நிலவரங்கள், பங்கு வர்த்தகத்திற்கு, சாதகமாக இல்லை.
பெட்ரோல் விலை உயர்வு:பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை, சென்ற வியாழன் நள்ளிரவு முதல், லிட்டருக்கு, 7.50 ரூபாய் உயர்த்தின. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும், அதே நேரத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, இழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இது, நாடு தழுவிய அளவில், கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. சீனா நாட்டினர் போல், இந்தியர்களும், குறைந்த தூர பயணத்திற்கு, சைக்கிளை பயன்படுத்த வேண்டும். அது, உடலுக்கும், பர்சுக்கும் நல்லது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 56.38 வரை சரிவடைந்து, வெள்ளியன்று, 55.38ல் நிலைபெற்றது. இதனால், பெட்ரோல் விலை குறைந்து விடாது.
பார்தி ஏர்டெல்:உள்நாட்டில், மொபைல் போன் சேவையில்,"4ஜி' தொழில்நுட்பத்தில் களம் இறங்கும் வகையில், முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் போட்டியை சமாளிக்கும் வகையில், பார்தி ஏர்டெல் நிறுவனம், ஆசியாவைச் சேர்ந்த குவால்கம் நிறுவனத்தின்,
49 சதவீத பங்குகளை, 16.50 கோடி டாலர் மதிப்பிற்கு வாங்கியுள்ளது.
ஆனால், மொபைல் போன் சேவையில் ஈடுபட்டு வரும், பல நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை கண்டு வருகின்றன. அல்லது லாபம் குறைந்துள்ளது. இது, வரும் காலத்தில், மொபைல் போன் சேவை கட்டணத்தை உயர்த்தக் கூடும்.
வருங்கால வைப்பு நிதி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கிகளில், நீண்ட கால வைப்பு தொகைக்கான வட்டி விகிதம், 10 சதவீதம் என்றளவில் உள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது, கடன்களுக்கான வட்டி விகிதம், இன்னும் சிறிது காலத்திற்கு குறையாது என்றே தோன்றுகிறது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ.,), காலாண்டு மற்றும் முழு நிதியாண்டிற்கான நிதிநிலை முடிவுகள் நன்கு உள்ளது. இதையடுத்து, வங்கி பங்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. நீண்டகால அடிப்படையில், வங்கி பங்குகளில் முதலீடு செய்யலாம்.
டாலரும், ரூபாயும்:டாலருக்கு எதிராக ரூபாயின் வெளி மதிப்பு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் செலாவணி மதிப்பும் குறைந்துள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடையாமல் நிலையாக இருந்தது. இதற்கு, பங்கு சந்தைகளில் மட்டுமின்றி, இதர இனங்களிலும் அன்னிய முதலீடு நல்ல அளவில் அதிகரித்திருந்தது தான் காரணம்.ஆனால், தற்போது, அன்னிய முதலீடுகள் குறைந்து போயுள்ளதும், ரூபாயின் வெளி மதிப்பு சரிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இருப்பினும், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள், அதிகளவில் தொகையை அனுப்பும் நிலையில், ரூபாயின் மதிப்பு, வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கையகப்படுத்தல்:சென்ற ஆண்டு வரை, இந்திய நிறுவனங்கள், உள்நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளிலும் நிறுவனங்களை கையகப்படுத்தும் போக்கு அதிகரித்து காணப்பட்டது. ஆனால், தற்போது, நிலைமை நன்கு இல்லாததால், பல இந்திய நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக, அண்மையில், பிக்பஜார் குழுமம், அதன் பான்டலூன் துணை நிறுவனத்தை விற்பனை செய்தது.அதேபோன்று, ரிலையன்ஸ் டெலிகாம், அதன் 26 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வோடபோன் :வோடபோன் இந்தியா நிறுவனம், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள இருப்பதாக, தொடர்ந்து கூறி வந்தது. தற்போது, பங்கு சந்தையில், நிலவரம் நன்கு இல்லாததால், இந்நிறுவனம், அதன் பங்கு வெளியீட்டை மேலும் சிறிது காலத்திற்கு, ஒத்திப்போட்டுள்ளது. அண்மையில், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பல நிறுவனப் பங்குகள் விலை, வெளியீட்டு விலையை விட மிகவும் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் வாரம் எப்படி?நாட்டின் முதுகெலும்பாக திகழும், பங்கு சந்தைகள் வலுவாக இருந்தால் தான், பொருளாதார நடவடிக்கைகள் நன்கு இருக்கும். பங்கு வர்த்தகம், தொடர்ந்து, மந்தமாக இருந்தால், அது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வார இறுதியில், உலக நிலவரங்களும், ரூபாயின் வெளி மதிப்பு உயர்வும், பங்கு வர்த்தகத்தை ஓரளவிற்கு முன்னேற்றியது. வரும் வாரத்திலும், இதே நிலை தொடரும் என எதிர்பார்ப்போம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|